பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

119



இப்படிப்பட்ட எச்சரிக்கையுடன் சிருங்காரபுரி நாடு இருக்குமென்று வேழநாடு எங்ஙனம் எதிர்பார்த்திருக்க முடியும்? எதிர்பாராத வகையில் தாக்கி விடலாமென்று மனப்பால் குடித்த வேழ நாட்டு அரசன் விஜயேந்திரனுக்கு மாலையில் சிருங்காரபுரி நாட்டின் எல்லையிலே ஏமாற்றம்தான் காத்திருந்தது. அங்கங்கே ரகசியமாக ஒளிந்திருந்த வீரர்கள் எதிரிகளை மிகுந்த கண்காணிப்புடன் தாக்கினர். வேழ நாட்டுடன் அண்டை நாடான அழகாபுரியும் ரகசியக் கூட்டுச் சேர்ந்திருந்தது.

இளவரசி கன்யாகுமரி தன் நாட்டின் படைக்குத் தலைமை ஏற்றாள். ரகசியப் பயிற்சி எப்படி ஆபத்துக்கு உதவிவிட்டது!... மன்னருக்குப் பதிலாக மன்னரின் மகள்!

வேழ நாட்டு வேந்தன் விஜயேந்திரனே தன் நாட்டுப் படைக்குத் தலைமை தாங்கினான். இளமைப் பொலிவுடன் அவன் திகழ்ந்தான். இப்படிப்பட்ட இக்கட்டான கட்டத்தில்தான் கன்யாகுமரி – விஜயேந்திரன் சந்திப்பு நிகழ வேண்டுமென்று விதி முடிவு கட்டியதோ?

சிருங்காரபுரி நாட்டின் இளவரசியும் வேழநாட்டின் இளவரசனும் நேருக்கு நேர் போரிட்டனர். இருவருடைய வாட்களும் மின்னல்களாகி மோதின, ஜோடிக் கண்கள், ஒருமித்த வைராக்கியத்துடன் இரு தரப்பிலிருந்தும் கிளைபரப்பிச் சமர் புரிந்தன. இரு பகுதிக் குதிரைகளும் எம்பி எம்பிக் குதித்தன.

மறுகணம்:

“ஆ!”என்றலறினான் விஜயேந்திரன்!

விழுப்புண்களின் நோவையும் மறந்தாள் இளவரசி. திரும்பினாள். “வேழநாட்டு அரசனின் முதுகில் யார் இப்படிக் குத்துவாளை கோழைபோல வீசியது?... ஐயோ, என் நாட்டுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கி விட்டார்களே! யுத்த தர்மத்திற்கே களங்கம் கற்பித்துவிட்டார்களே!”