பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

 121



வேழநாட்டரசன் விஜயேந்திரன் விம்மினான்:

“இளவரசி!.... இருவகையில் நான்தான் யுத்த தர்மத்தை மீறியிருக்கிறேன். நாதசுரபியை ஏவினேன். அவள் முதுகில் என் நாட்டானே வாள் வீசினான். இப்போது என் நாட்டைச் சார்ந்த நாதசுரபியே என் முதுகில் வாளைப் பாய்ச்சினாள். இரு தப்புக்களும் என் நாட்டினையே சேரும்!...”

மனிதாபிமானம் நெகிழக் கண்களைத் திறந்தாள் இளவரசி கன்யாகுமரிக் கண்ணீர் மாலை மாலையாக வழிந்தது.

“அரசே! இப்போது நாம் பிரிவோம், உங்கள் உடல் நலம் பேணுங்கள். மீண்டும் ஒரு தினம் பகிரங்கமாக நாள் நிர்ணயம் செய்து நாம் இருவருமே மீண்டும் போரிடுவோம்!... எந்த அரசிலும் நிகழாத புதுமையாக இது இருக்கட்டும்!...”

அப்போது அங்கு-யுத்த களத்தில், சிருங்காரபுரி நாட்டின் அரசர் பூபேந்திர பூபதி அமைச்சர் புடைசூழத் தோன்றினார்.

மயங்கிச் சோர்ந்து இருந்த வேழ நாட்டரசன் மெல்லமெல்ல விழி திறந்தான். இளவரசியின் மடியில் தலை சாய்த்துக் கிடப்பதை அப்போதுதான் அறிந்தவனாக, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். “இளவரசி! இப்போது நாம் போரை மீண்டும் தொடங்கலாம்... எனக்கு வீர மரணமே பிடிக்கும்!” என்று வீறு பூண்டு கர்ஜித்தான்.

இளவரசி விம்மினாள்!

கோல நிலவு விளையாடியது.

சிருங்காரபுரி நாட்டின் வேந்தர் பூபேந்திரபூபதி வாய் திறந்தார். “முதலில் விஜயேந்திரனின் புண்ணை ஆற்றுவது அவசியம்,” என்று சொல்லி, தம் நாட்டு அரண்மனை வைத்தியரை வரவழைக்கும் படி ஆணையிட்டார்.