பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

33

கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்
புலர் குரல் ஏனற் புழையுடைய ஒரு சிறை
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி - தோழி - அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன்கொல்
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?

- கபிலர் அக 82

“என் தோழியே, வாழ்க! அசையும் மூங்கில் துளைக்கப் பெற்று விளங்கும் துளையில் அழகிய மேல் காற்றினால் எழும் ஒலி குழலிசையாகவும், தோற்றிய இனிய அருவியின் குளிர்ந்த நீரின் இனிய ஓசை கூட்டமான தண்ணுமைகளின் நெருங்கிய இசையாகவும், கூட்டமான கலைமான்களின் தாழ ஒலிக்கும் கடிய குரல் பெருவங்கியத்தின் இசையாகவும், அதனுடன் மலைச்சாரலில் உள்ள மலர்களினிடையே உள்ள வண்டின் ஒலி இனிய யாழிசையாகவும் விளங்கும், ஒத்திசைய வண்ணம் ஒலிக்கும், இசைகளைக் கேட்டு ஆரவாரம் மிகுந்து குரங்குகளாகிய நல்ல அவையினர் வியப்புற்றுப் பார்க்க, மூங்கில்கள் வளர்வதற்கு இடமான பக்க மலைகளில் அங்கு மிங்கும் கூத்தாடும் மயில்கள்; விழாக்காலத்தில் கூத்தாடும் அவையில் புகுந்து ஆடும் கூத்தியர் போலத் தோன்றும் இத்தகைய இயல்பு கொண்ட மலை நாட்டையுடைய மலரால் ஆன மாலையை அணிந்த மார்பை உடைய தலைவன் அழகிய வில்லைக் கையில் பற்றிச் சிறந்த கணையை ஆராய்ந்தெடுத்துத் தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற வழியை வினவிக் கொண்டு முதிர்ந்த கதிரையுடைய தினைப் புனத்தின் வாயிலில் ஒரு பக்கத்தே நின்றான் அவனைக் கண்ட மகளிர் பலர்; அங்ஙனம் கண்டவர்களுள் நான் ஒருத்தி