34
அப்பாத்துரையம் - 19
பண்டைத் தமிழரிடையே கலை இயல்கள் தழைத்திருந்தன என்பதற்குக் கவிதையில்கூடச் சங்ககாலத் தமிழர் காட்டிய பகுத்தறிவு சான்று பகரும். என்ன கலைகள், எத்தனை கலைகள் இருந்தன என்பதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஆராய்ச்சியாளர் காண முனைவது பயன்தரும். ஆனால், அந்த ஆராய்ச்சியை அவ்வத் துறையில் இந் நாளைய கலையறிவுடை யோர் செய்தலே முழுநிறை பயன்தரும்.
தமிழ்க் கலைகள் அழிந்ததற்குப் பெரிதளவு காரணம் கலை வளர்ப்பதற்கென்றே அமைந்த சங்கங்களையும், அதனையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர், விறலியர் வகுப்பினரை ஆதரிப்பதையும் மதிப்பதையும் விடுத்துத் தமிழ் மன்னரும் தமிழகச் செல்வரும் தமிழ் மக்களும் படிப்படியாக ஆரியப் போலி அறிஞரையும், போலி இலக்கிய மொழியாகிய சமற்கிருதத்தையும், போலி மதமாகிய ஆரிய மதத்தையும், ஆதரித்து நாட்டுப் பகைவர்களாகச் சென்ற இரண்டாயிர ஆண்டு வாழ்ந்து வந்திருப்பதுதான். தமிழக வாழ்வில் உச்ச மதிப்பிலிருந்த பாணர், விறலியர் இன்று தமிழர் வாழ்விலிருந்து ஒதுங்கிக் கோவிலின் மீளா அடிமைகளான இசை வேளாளர்குடி ஆகியுள்ளனர்.
தமிழரிடையே வழங்கிய அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிச் சிலப்பதிகாரமும் பெருங்கதையும் பெருமைபடப் பேசுகின்றன.
“பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதி"
என்று சிலப்பதிகார ஊர்காண் காதை அறுபத்து நான்கு கலை வளர்த்த வகுப்பினர் இருந்த வீதி குறிக்கிறது.
“யாழ்முதலாக அறுபத்தொடு நான்கு
ஏரிள மகளிர்’
என்று அக்கலையில் நங்கையரைப் பெருங்கதை குறிக்கின்றது.
கலைகள் பலவற்றின் பெயர்களைத் தரும் இன்னொரு பகுதி மணிமேகலை ஊரலர் காதையில் காணப்படுகிறது.