உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. மாயக் கட்டில்

மானூரில் மயன் என்ற பெயரை அறியாதவர் எவரும் இல்லை. அவன் மாயக் கைத்திறம் வாய்ந்த தச்சன், மூன்று தலைமுறைகளாகச் செல்வர் வீட்டுப் பணப்பெட்டிகள் முதல் ஏழை வீட்டு அரிவாள்மணை வரை, அவன் கைபடாத பொருள் இல்லை. ஆனால் குடிமரபாக அந்தத் தொழிலை நடத்த அவனுக்கு ஒரு புதல்வன் கிடையாது. மாலை என்ற ஒரு மகள் மட்டுமே இருந்தாள்.

அவன் அவளைத் தன் தமக்கை புதல்வனான மதியனுக்கு மணம் செய்வித்து, அவனிடம் தன் தொழிலை விட்டுச் சென்றான்.

மதியன் மாமனிருக்கும்போது நல்ல முறையில் தொழில் பழகிக் கொள்ளவில்லை. அதற்கு அவன் சோம்பலே பெரிதும் காரணமாயிருந்தது. மாமன் இறந்தபின் அவன் இதை எண்ணி வருந்தினான்.

மாமன் புகழை எண்ணிப் பலர் அவனிடம் வேலை கொண்டு வந்து கொடுத்தனர். அவன் அவற்றில் ஒன்றிரண்டு தான் செய்ய முடிந்தது. மாமன் கைத்திறம் அதில் கூட இருந்தது என்று ஊரார் கூறினார்கள். ஆயினும், அவன் பெரு முயற்சியுடன் சிறிதளவே செய்ததனால், ஊதியம் பற்றவில்லை. அவன் மனைவி பல வீடுகளில் வேலை செய்து, அவர்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியதாயிற்று.

வேலை செய்து வேலை செய்து, மாலை உடல் நலிவுற்றாள். ஆனால், பிள்ளை குட்டிகள் பெருகின. இனி நெடுநாள் இம்மாதிரி வேலை செய்ய முடியாது என்று அவள் கண்டாள். ஒருநாள் அவள் கணவனிடம் மனம் திறந்து பேசினாள்: