உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

175

அய்யாவு எவருக்கும் சொல்லக்கூடாதென்று வைத்திருந்த இரக சியத்தை அவளிடம் மட்டும் சொன்னான்.

ஆவுடை, இவ் ஒரே இரகசியத்தை அடுத்த வீட்டு மாடிக்குடியில் வேலை பார்த்த சாத்திக்கும், சாத்தி அதை அவ்வீட்டில் பாட்டுக் கற்றுக் கொடுத்த எயினிக்கும், எயினி அதைத் தன் அந்தரங்க நேயனான சாத்தியின் அண்ணன் சாத்தனுக்கும் அறிவித்தாள். இப்படியாக அடுத்த ஆண்டு இந்திரவிழா வருவதற்குள் ஒருசிறு குடியிருப்புக்குப் போதிய அளவு ஆட்கள் வானுலக யாத்திரைத் திட்டத்தில் தம் பெயரைச் சேர்த்துவிட்டனர்.

இவ்வளவு பேர் சேர்ந்துவிட்டார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது.

வானுலக யாத்திரையைக் காண ஆவல் கொண்டவனைப் போல, இந்திரவிழாவன்று பொழுது சாய்ந்ததே முழுநிலாச் செல்வன் கீழ்வானின் படிக்கட்டில் கால் வைத்து விரைந்து மேலேறினான். மதிச்சியத்தில் பாதியும் மதுரை முழுவதும் இன்பத்துயிலில் அயர்ந்தன. ஆனால், மதிச்சியத்தின் மற்றொரு பாதி சிறுசிறு கும்பலாக மதுரைக் கோயிலை நோக்கிச் சென்றது. மாடம்பியின் கைவேலையாக நீண்டு வளைந்து பரந்து கிடந்த கடம்பவனைச் சோலையில் குசுகுசுவென்ற அரவமும், கலகலவென்ற அடங்கிய சிரிப்பும் இடைவிடாது கேட்டன.

நிலவின் பிழம்புருவாகத் தோன்றிய நிமலன் திருவுருவில் இனியதொரு நிழலாடிற்று. பாலொளியின் பருவடிவாகத் தோன்றிய வெள்ளானை மலர்ப் பூசையிலீடுபட்ட நேரத்திலும் கூட, அது புன்முறுவல் பூத்ததாகத் தோற்றிற்று. ஆனால் மாடம்பிக்கு இவற்றையோ தன் பின்னேயுள்ள அணிவரிசையின் திருவிளையாடலையோ கவனிக்க நேரமில்லை. அவன் இமையாநாட்டம் பூசை முடிந்து யானை எப்போது மேலெழும் என்பதைக் கவனிப்பதிலேயே முழுதும் ஈடுபட்டிருந்தது.

முழுநிலவு உச்சி ஏறிச் சரியத் தொடங்கிற்று.

யானை துதிக்கையை மெல்லமெல்ல மேலே தூக்கிற்று. அதன் முன்னங்கால்கள் சற்று வளைந்து மேலெழுந்தன.