உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இளவரசன் இதாவரேன்

ஆரியூரில் வாழ்ந்த வணிகச் செல்வர் பலர். அவர்களில் செம்மேனியின் செல்வம் அளவிடற்கரியதாயிருந்தது. தென்கடல், மேல்கடல், கீழ்கடல் ஆகிய மூன்று கடல்களின் துறைமுகங்களிலும் அவன் கப்பல்கள் சரக்கை ஏற்றி இறக்கிய வண்ணம் இருந்தன. தமிழகமெங்கணும் இருந்து அவன் பண்டகசாலையில் பொருள்கள் வந்து குவிந்து கொண்டே யிருந்தன. அவனுக்கென்று பாண்டிய மன்னன் ஒரு தனிச் சுரங்கப் பணித் தலைவரையும், சுங்கக் கணக்கரையும் அமர்த்தியிருந்தான்.

ஒருவரைவிட ஒருவர் அழகியராக, அவனுக்கு ஏழு புதல்வியர் இருந்தார்கள். எல்லாரிலும் இளையாள் வயது பதினாறு. அவள் பெயர் செங்கழுநீர். மற்ற ஆறு புதல்வியருக்கும் திருமணமாகி இருந்தது. மன்னிளங்கோக்களும், வணிக இளங்கோக்களும் அவர்கள் துணைவியராக அமைந்தனர். செங்கழுநீரையும் இருசார் இளங்கோக்களும் விரும்பி மணஞ்செய்யக் காத்துக் கிடந்தனர்.

செம்மேனியின் ஐம்பதாண்டு நிறைவுவிழா வணிகக் குழாத்தினரால் பொன்விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஏழு நாட்கள் நகர் முழுதும் அல்லோகலப்பட்டது. எட்டாவது நாளைச் செம்மேனி தன் குடும்ப விழாவாகத் தனி முறையில் கொண்டாடினான். மருமகச் செம்மல்கள் அறுவரும் பேரன், பேத்திமார்களும், உறவினரும் நெருங்கிக் குழுமியிருந்தார்கள். குடும்பச் சூழலிலேயே அடிசில் விருந்து, இசை விருந்து, கேளிக்கைகள், ஆடல் பாடல்கள் நடைபெற்றன. அவற்றில் செம்மேனியின் ஏழு புதல்வியரும் பங்கு கொண்டனர். அவர்களிடையே செங்கழுநீர், முத்தங்கோத்த செம்பவளமாக ஆடிப்பாடி எல்லாரையும் களிப்பில் ஆழ்த்தினாள்.