உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

7

யிருக்க வேண்டும். இருபது முழம் துணிக்கு ஓர் உடுப்பு சமமானதன் காரணம் இதுவே.

இருபது முழம் துணி = ஓர் உடுப்பு என்ற தொடரில் இந்த உழைப்பைப் பற்றிய குறிப்பு எழுவதில்லை. அது பற்றிய எண்ணமும் எழுவதில்லை. ஆயினும் முதல் பேரம் இந்த எண்ணத்தின் பயனாகத்தான் ஏற்பட்டது என்பதில் ஐயமில்லை. மனிதர் பண்டமாற்றுப் பழக்க மரபும், மனிதர் மொழி மரபும் இந்த கருத்தை இன்னும் தம்முள் மறைத்துப் பொதித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

விலைமதிப்பு உயரலாம். தாழலாம். ஆனால் அது எப்போதும் இந்த விகிதத்தின் பெருங் கூறாகவோ சிறு கூறாகவோதான் இருக்கும். இருபது முழம் துணி = ஓர் உடுப்பு என்பது நாற்பது முழம் துணி = ஓர் உடுப்பு என்றோ, இருபது முழம் துணி = இரண்டு உடுப்பு என்றோ மாறலாம். இது உழைப்பு மதிப்பின் மாறுபாட்டையோ, உழைப்பு மாறுபாட்டையோ, பயன் மதிப்பின் மாறுபாட்டையோ காட்டலாம். ஆனால் உழைப்பு மதிப்பே இவ்விகிதத்தின் அடிப்படைக் கூறு என்பதில் ஐயம் இருக்க முடியாது.

உழைத்துச் சரக்குகளை உருவாக்குபவர்கள் தம் பயன் கருதியும் அவற்றை உண்டு பண்ணலாம். விலை மதிப்புக் கருதியும் அவற்றை உண்டு பண்ணலாம். தொடக்கக் காலத்தில் மனிதன் தனக்கு வேண்டியவற்றைத் தானே செய்துகொண்டான். அப்போது அவனுக்குச் சரக்குப் பயன் மதிப்புடையதாக மட்டுமே இருந்தது. குடும்பத்தில் அல்லது குடும்பம் போன்ற அன்பெல்லைக்குள் ஒருவன் மற்றக் குடும்ப உறுப்பினர் பயன் கருதி உழைக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, தாய் தனக்காக மட்டுமன்றித் தன் பிள்ளைக்காகவும் உடுப்புத் தைக்கக் கூடும். ஆனால் இங்கும் பயன் மதிப்பு மட்டும்தான் ஏற்படுகிறது. தாய் பிள்ளையுடன் பண்டமாற்றுச் செய்வதில்லை. அன்புச்சூழல் எல்லை கடந்து மதிப்புச்சூழல் எல்லையில் முன்னேறும்தோறும் தான் பொருள்கள் பண்டமாற்று மதிப்புப் பெறுகின்றன. வாணிகம் எப்போதும் நாடு, இனம் ஆகியவற்றின் எல்லை கடந்த பின்னரே வளர்கின்றன என்பதை வரலாற்றில் காணலாம்.