உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. வெற்றிப் பாதை

ஹைதர் அலியின் ஆட்சி 1761-லிருந்து 1782 வரை நீடித்திருந்தது. இந்த இருபத்தோராண்டுக் காலத்திலும் ஓர் ஆண்டுகூடப் போர் இல்லாமல் கழிந்ததில்லை. ஓர் ஆண்டுக் காலம்கூட அவன் தலைநகரில் அரண்மனை வாழ்வு வாழ்ந்ததும் இல்லை. ஆயினும், இவற்றுக்கிடையில் அவன் குடும்பத்தின் வாழ்விலும் அரண்மனை வாழ்விலும் எல்லாம் திட்டப்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அக்குடும்பத்தின் ஒழுங்கைப் போலவே நாட்டின் ஆட்சி முழுவதும் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு, எல்லா அரங்கங்களும் ஒரு சிறிதும் வழுவாமல் இயந்திரங்கள் போல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அவன் வீரவெற்றிகள் எந்த அரசன் வீர வெற்றிகளுக்கும் இளைத்தவை யல்ல. ஆனால், அவன் ஆட்சித் திறம் அவ்வெற்றிகளின் புகழையும் மங்கவைப்பதாயிருந்தது.

மன்னுரிமை ஏற்றவுடன் ஹைதர் தன் பெயரால் புதிய நாணயம் வெளியிட்டான். அரசன், அமைச்சன் நஞ்சிராஜன் ஆகியவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் நேரடியாகக் கண்டு, விலைமதிப்பற்ற ஆடையணிகளை அவர்கட்குப் பரிசளித்து அவர்களைப் பெருமைப்படுத்தினான். அவர்கள் குறைவற்ற நிறைவாழ்வுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நிறைவேற்றினான். சீரங்கபட்டணம் கோட்டைக்கு வீரமிக்க மக்தூம் சாகிபையே தலைவனாக நியமனம் செய்தான். பல தலைவர்களிடம் ஒப்பற்ற வீரப்பணி செய்தும் தகுதிக்கேற்ப மதிப்புப் பெறாதிருந்த பத்ருஸ் ஸமான்கான் நாட்டு என்ற வீரனை, அவன் தன் காலாட்படைகளின் தளபதியாக்கிப் பெருமைப்படுத்தினான்.

குந்திராவின் சதியால் பதவியிழந்து நாடோடியாகத் திரிந்தபோது, பெங்களூர் வணிகரிடம் ஹைதர் வாங்கிய கடன்களும் இப்போது தீர்க்கப்பட்டன.