இதயம் அப்படியே ஆனந்தப் பூரிப்பிலே ஒருமுறை சிலிர்த்து அடங்கிவிடும். இம்மாதிரி இனிய சந்தர்ப்பங்கள் எத்தனை எத்தனையோ!
ஒருநாள் என்றுமிலாதபடி டாக்டரின் மனத்தில் ஒருவித ஏக்கமும் வருத்தமும் குடிபுகுந்திருந்தன. காரணம், காஞ்சனாவிற்கு பிரசவ தினம் நெருங்க நெருங்க அவள் உடல் தளர்ந்துவிட்டது.
அன்று பிரசவ நாள். சுயஉணர்வு தப்பிவிட்டது. காஞ்சனாவிற்கு. பிரசவம் சுகமாகத்தான் ஏற்பட்டது. ஆனால் டாக்டரை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாள் அந்தக் காஞ்சனா!
தன் வாழ்வு அஸ்தமித்துவிட்டதென எண்ணிப் பொருமினார். ஆனால் அவ்விதம் நினைவு வரும் சமயமெல்லாம் அவருக்கு ஆறுதல் அளித்து வந்தது அவரது கண்ணம்மா தான்!
★
டாக்டர் சுந்தரத்திற்கு வேண்டிய உற்றார் உறவினர்கள் அவரை 'இரண்டாம் கல்யாணம்' செய்துகொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவர்களது வார்த்தைகளுக்கெல்லாம் சிறிதும் மசியவில்லை டாக்டர். அதேசமயம், பச்சைக் குழந்தையின் பராமரிப்பிற்குப் பெண் உதவி மிகவும் அத்தியாவசியம் என்பதைத் தீர உணராமலுமில்லை.
"காஞ்சனா போல இனிமேல் இந்த ஜன்மத்திலா ஒரு மனைவி எனக்கு வாய்க்கப்போகிறாள்? இந்த ஒரு கேள்வியைத்தான் தன்னை நாடிவரும் பந்துக்களிடம் பிரயோகித்து வந்தார். காஞ்சனாவுடன் கழிந்துபோன இன்பமயமான அந்நாட்களைத் திரும்பவும் எண்ணிப்பார்க்கும்போதெல்லாம் மறுணத்தைப்பற்றிய நினைவே அவரது மனதில் தலை காட்டாமலிருந்தது!
இப்படியே நாட்கள் நகர்ந்தன.
42