40
சிலவற்றைக் குலைகளிலே பழுக்கும்படி விடுவார். தக்க சமயம் அறிந்து அவற்றை வெட்டிவிடுவார். ஒரு சீப்புப் பழத்தையாவது கடவுளுக்கு நிவேதனம் செய்து உண்ண மாட்டார். எல்லாவற்றையும் காசாக்கவேண்டும் என்பதே அவர் நோக்கம்.
அவருக்கும் ஔவையார் தம் ஊருக்கு வந்திருப்பது தெரிந்தது. மருத்தனார் வீட்டுக்குச் சென்றதையும் அங்கே விருந்துண்டதையும் கேள்வியுற்றார். "நாமும் அந்தப் பாட்டியை அழைத்து வரலாம்" என்று அவருக்கு ஓர் எண்ணம் உண்டாயிற்று. அந்த மூதாட்டியாருடன் பல பேர் வருவகைக் கேட்டபோது, அவ்வளவு பேரும் உணவுண்ண உட்கார்ந்தால் என்ன செய்வது என்ற அச்சம் எழுந்தது. ஆகவே, மருத்தனார் ஓர் வீட்டில் அவர்கள் உணவு கொண்ட பிறகு அவரை வருவித்தால் அதற்கு அவசியம் இராது என்று நினைத்து, அப்படியே அந்தச் சமயத்தில் ஓர் ஆளை அனுப்பினர்.
வந்தவர் ஔவைப் பிராட்டியாரைத் திருத்தங்கியின் வீட்டுக்கு வர வேண்டுமென்று அழைத்தார். அப்போது உடனிருந்த சிலர், "அந்த உலோபி வீட்டுக்கா?" என்று முணுமுணுத்தனர். அதை ஔவையார் கவனித்தார். கூப்பிடுகிற இடத்துக்குப் போவதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது என்று அவர் வருவதாகச் சொல்லியனுப்பினார். மருத்தனாரிடம் விடை பெற்றுக் கொண்டவுடன் நேரே திருத்தங்கியின் வீட்டுக்குச் சென்றார்.
அந்த வீட்டுக்குள்ளே புகும்போது திருத்தங்கி எதிர்கொண்டு அழைத்தார். வீட்டைப் பார்த்தால் எங்கும் பளபளவென்று இருந்தது. கணத்துக்கு ஒரு முறை துடைத்து வைத்திருப்பார் என்று தோன்றியது. ஔவையாரை ஓர் இருக்கையில் அமரவைத்தார்,