பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 125


வேளாள ரறுதொழில்

வேளாளரறு தொழிலுழவு பகக்கால
ரெள்ளிதின் வாணிபங்குயிலுவங்காருகவினை.
யொள்ளிய லிருபிறப்பாளர்க் கேவற்செயல்.

ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டக சாதி, திராவிடசாதியென்னும் நான்கு பாஷையை சாதிக்குங் கூட்டத்தோருள் அந்தந்த அறுவகைத் தொழில்களை எவ்வெவர் சரிவர சாதிக்கின்றார்களோ அவரவர் தொழிலையும், விவேகமிகுதியையும் கண்டு அந்தணரென்றும், அரசரென்றும், வணிகரென்றும், வேளாளரென்றும் அழைத்து வந்தார்கள்.

இத்தகைய நான்கு வகுப்பிற்கும் ஆதியாய் அறநெறியாம் மறையருளி ஆதியந்தணரென்று அழைக்கப் பெற்றவரும்,

சக்கிரவர்த்தித் திருமகனாகத் தோன்றி சந்திரபிறை முடியணிந்த இனிய தமிழ்மொழி ஈய்ந்து மன்னும் இறைகொண்டு இறையவனென்று அழைக்கப் பெற்றவரும்,

நவமணிகளாம் இரத்தினவர்க்கங்களையும், பவழம் முத்து முதலியவைகளையும், நவதானியங்களையும் விளக்கி ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறிக்கொள்ளும் வகைகளை விளக்கி வணிகரென்று அழைக்கப்பெற்றவரும்,

பூமியை சீர்திருத்தி நஞ்சை, புன்செய் என்னும் தானியபேதங்களை விளக்கி அதனதன் விளைவு காலங்களையும் வகுத்து அதன் விளைவுகளுக்கும், விருத்திகளுக்கும் உங்கள் உள்ளத்தில் எழும் அன்பும், ஈகையுமே காரணமென்றும் விளக்கியச் செயலால் வேளாளருக்குத் தலைவன் என்று அழைக்கப்பெற்றவரும் புத்தபிரானேயாகும்.

இவைகள் யாவும் தொழிலைப் பற்றிவந்தப் பெயர்களாதலின் அத்தொழில்களின் விருத்தியை விளக்கிக்காட்டிய வேதமுதல்வனுக்கே அந்நான்கு பெயரையும் அளித்துள்ளார்கள்.

கல்லாடம்

மூன்றழல் நான்மறை முநிவறத்தோய்த்து / மறைதீருகுத்தலின் மறையோனாகியும்
அந்தணநிலையும் மீனுரு கொடியும் / விரிதிலை யைந்தும் தேனுறை தமிழும்
திருவுரை கூடலும் மணத்தலின் / மதிக்குல மன்னனாகியும்
நவமணியெடுத்து நற்புலங் காட்டலின் / வளர்குறி மயங்கா வணிகனாகியும்
விழைதரு முழவும் வித்துநாறுந் / தழைதலின் வெள்ளான் தலைவனாகியும்.

அருங்கலைச்செப்பு - நாற்செயற்பத்து

அறநெறி யோதி ஆதியந்தணனா / மறை யருளித்தான் மநு.
குடியிறைக்கொண்டு குலவிறையாகி / படிதனை யாண்டான் பரன்.
நவமணியேற்று நறுநெல் வாணிபஞ்செய் / குவலய மீயந்தான் குரு.
மேழியைவிளக்கி விளைவெள்ளானென் / நாழியை யீய்ந்தா னறன்

இத்தகையத் தொழிற்கொண்டு புத்தமடங்களென்னும் இந்திர வியாரங்களில் தங்கி உபநயனம் பெற்று செல்லல், நிகழல், வருங்காலம் மூன்றினையுஞ் சொல்லும் இருபிறப்பாளனாகி மகடபாஷையில் அறஹத்தென்றும், மகட பாஷையில் பிராமணனென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்ற சங்கத்து (மகாஞானிகளைக் கண்டவுடன் அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்களும் மிக்க பயபக்த்தியுடன் வணங்கி அவர்களுக்கு வேண்டியவைகளைக் கொடுத்து ஆசீர்பெற்றுவந்தார்கள். இவ்வகைக் குடிகளால் புத்தமடங்களிற்றங்கியுள்ள மகாஞானிகளாகும் அந்தணர்களுக்குள்ள சிறப்பையும், அரசர் முதல் சகல குடிகளும் அவர்களுக்கு அடங்கி ஒடிங்கிநிற்கும் அன்பையும் நாளுக்குநாள் பார்த்துவந்த மிலைச்சர்கள் இவ்வேஷத்தால்தான் நாம் சீர்பெற வேண்டுமென்றாலோசித்தார்கள்.

மிலைச்சர் பிராமணவேஷமெடுத்த விவரம்

வடயிந்தியாவில் சாக்கையர் வியாரம், சாக்கையர் தோப்பென்றும், தென்னிந்தியாவில் இந்திரவியாரம், இந்திரவனமென்றும் வழங்கிவந்த கூடங்களில்