பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140 / அயோத்திதாசர் சிந்தனைகள்


உத்தியோகஸ்த்தர்களுடன் களங்கமின்றி தாங்களும் அந்தஸ்தான உத்தியோகங்களில் நிறைந்திருப்பார்கள். அங்ஙனம் கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தோருக்கு தங்கள் சரித்திரங்களை விளக்கி தங்களுக்கு நூதன சாதியோர்களால் நேரிட்டு வரும் இடுக்கங்களையும் தாழ்ச்சிகளையும் முன்னுக்கு ஏறவிடாத குறைகளையும் நீக்கிக் கொள்ளாமல்.

நாங்கள் பூர்வம் இராஜாங்க அந்தஸ்தில் வாழ்ந்து பதிநெட்டு விருதுகளாகிய வெள்ளையங்கி வெள்ளை நடுக்கட்டு, கலிவாகு, குலவாகு, இட்சுவாகு, வீரவாகு, வம்மிஷவரிசா வாகுவல்லயம், வெண்பிறை முடி என்னும் வெள்ளைப்பாகை வெள்ளைக்குதிரை வெண்சாமரை வெள்ளைக்கொடி வெள்ளைக்குடை முதலிய பெளத்தவரச சின்னங்களை மட்டிலுந்தங்கள் விவாக காலங்களில் ஆடம்பரஞ் செய்துக் கொண்டுவந்தார்கள். நாளது வரையில் அவ்விருதுகளைக் கொண்டே தங்கள் விவாக காலங்களில் ஊர்வலம் வருகின்றார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்கள் சுப அசுப காரியாதிகளில் மட்டிலும் பௌத்ததன்மத்தையும் செயலையும் அநுஷ்டித்து வந்தபோதிலும் இவர்களுக்கு எதிரிகளாகிய வேஷபிராமணர்கள் இவர்களை முன்னுக்கு ஏறவிடாத செய்கைகளிலேயே ஜாக்கிரதையாயிருந்துக் கொண்டு அன்னிய தேசத்திலிருந்து நூதனமாகக் குடியேறி இவ்விடம் வரும் யாவருக்கும் தங்களை உயர்ந்த சாதிபிராமணர்கள் என சொல்லிக் கொண்டு, தங்கள் வேஷபிராமணத்திற்கு எதிரிகளாக இருந்த திராவிட பௌத்தர்களை சகலசாதியோருக்குந் தாழ்ந்த சாதியோர் என்றும் பறையர் என்றும் இழிவு கூறி தலையெடுக்கவிடாமல் செய்துவந்ததும் அன்றி மற்றும் செய்துவந்த விருத்திகேடுகள் யாதெனில்

கருணைதங்கிய மிஷநெரிமார்கள் இவ்விடம் வந்து தோன்றி எங்குங்கலாசாலைகளை வகுத்தபோது அக்கலாசாலைகளுள் இவ்வெழிய நிலையுற்ற சிறுவர்கள் வாசிக்கப்போவார்களானால் தாழ்ந்த சாதி பறையர்களுடையப் பிள்ளைகள் எங்கள் உயர்ந்த சாதிப்பிள்ளைகளுடன் உழ்க்கார்ந்து வாசிக்கப்படாது அப்படி அவர்களையும் கலாசாலைகளில் சேர்ப்பீர்களானால் எங்கள் சாதிப்பிள்ளைகளை உங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப மாட்டோம் என்று சாதிபேதமுள்ள சகலரும் தங்கள் பிள்ளைகளை அனுப்பாமல் நிறுத்தியிருந்தார்கள்.

அவ்வகை நிறுத்திவிட்டபோதிலும் கருணைதங்கிய மிஷநெரிமார்கள் அவர்களுக்கு யாது மறுமொழி கூறிவந்தார்களெனில் நீங்கள் தாழ்ந்த சாதி பறையர்கள் என்று கூறும் சிறுவர்களில் ஒருவன் இக்கலாசாலைக்கு வருவானாயின் அவனுக்காக கலாசாலையை திறந்து சகல கலைகளையும் கற்பித்து வருவோம். சாதிபேதமுள்ள நூறுபிள்ளைகளை நீங்கள் நிறுத்திவிட்டபோதிலும் எங்கள் கலாசாலைகளுக்கு உங்கள் சிறுவர்கள் வரவை எதிர்பார்க்கமாட்டோம் என்று கூறிவந்தார்கள்.

அதினால் சாதிபேதமுள்ளோருக்கு வேறுவழியில்லாமல் தாழ்ந்த சாதிபறையர்கள் என்போருடன் உயர்ந்த சாதிகள் என்போரும் கலந்து வாசித்து வந்தார்கள்.

காரணம், இந்த சாதிபேதக் கொள்கைகளோ பொய்க்கட்டுப்பாடு. அப்பொய்க் கட்டுப்பாடு தோன்றியதோ பௌத்தர்கள் யாவரையும் தாழ்ந்த சாதிகள் என்று தலையெடுக்க விடாமல் நசித்து வருவதற்கேயாம். பௌத்தர்களை நசிக்க வேண்டிய முயற்சிகள் எங்கெங்கு கைகூடி வருகின்றதோ அங்கங்கு தங்கள் சாதிகளை உயர்த்திக் கொள்ளுவதும்.

பௌத்தர்களை நசிக்க வேண்டிய முயற்சிகள் எங்கெங்கு கெடுகின்றதோ அங்கங்கு தங்கள் நூதன சாதிபேதங்களை ஒடுக்கி பூர்வசாதிபேதமற்ற நிலையில் வந்து விடுவதும் அவர்கள் சமயதந்திரங்களேயாம்.

- 2:40; மார்ச் 17, 1809 -

இவ்வகையாய் சாதிபேதமற்ற திராவிட சிறுவர்கள் சாதிபேதமுள்ளோருடன் கலந்து வாசித்து வருங்கால் கனந்தங்கிய மிஷநெரிமார்களின் கருணை