பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 161


விசாரித்தல் வேண்டும். குடியரசாயின் அக்குடிகளின் குணா குணங்களையும், செயலையும் ஆராய்தல் வேண்டும். அத்தகைய ஆராய்ச்சியில் ஐரோப்பியர்கள் செயலையும், இந்துக்களின் செயலையும் ஆராய்வதில் ஐரோப்பியர்கள் தக்க திரவியத்தை சேகரித்து பந்துக்களில்லாது தனித்திருப்போர் தங்கள் மரணகாலத்தில் உள்ள திரவியத்தை பொதுவாய் தங்கள் சுதேச விருத்தியையும், சுதேசிகளின் சிறப்பையுங் கருதி வித்தியா சாலைகளுக்கும், வேதசாலைகளுக்கும், கைத்தொழில்சாலைகளுக்கும், கைம்பெண்களை போஷிக்குஞ்சாலைகளுக்கும், அநாதைமக்களை ஆதரிக்குஞ் சாலைகளுக்கும் எழுதிவைத்துவிடுகின்றார்கள்.

அத்திரவியத்தைக் கைப்பற்றியக் கூட்டத்தார் தேச விருத்தியையும், தேச மக்கள் சிறப்பையும் விருத்திசெய்துவருகின்றார்கள்.

இத்தகையப் பரோபகாரச் சிந்தையுள்ள ஐரோப்பியர்கள் எத்தேசம் புகினும் தங்களுக்குள்ள சாதிபேதமில்லாத களங்கமற்ற எண்ணத்தால் அத்தேசத்தையும், அத்தேசக் குடிகளையும் தங்களைப்போல் சுகமடையவும், சீர்பெறவும் செய்துவருவது பிரத்தியட்ச அநுபவமாகும்.

இந்தியர்களுக்குள் சிலர் ஏராள திரவியத்தை சேகரித்து இறக்குங்கால் பணத்தை விட்டுப் போகின்றோமே என்னும் ஏங்கலால் சடுதியிற் பிராணன் நீங்காது சிலேத்தும் வாதைக்குள்ளாகி தனது சொத்தை அநுபவிக்க யாருமில்லாதிருப்பதை உணர்ந்தும் சுதேச சீர்திருத்தசாலைகளில் ஒன்றுக்கேனும் ஈய்ய மனம்வராது இறந்தபின் பணத்தை சம்பாதித்தவழி எவ்வழியோ அவ்வழியாற் பாழாகிவிடுகின்றது. இதுவும் பிரத்தியட்ச அநுபவமாகும்.

இவ்விருதிரத்தார் குணத்திலும், செயலிலும் ஐரோப்பியர்களே இவ்விந்து தேசத்தை ஆண்டுவருவதால் சகல குடிகளும் சுகமடைவார்களா அன்றேல் இந்தியர்கள் வசம் ஆளுகையைக்கொடுத்துவிட்டால் சகல குடிகளும் சுகமடைவார்களா என்பதை ஒவ்வோர் விசாரிணை புருஷருந் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சாதிநாற்றம் பெருகியுள்ள இத்தேசத்துள் சகல குடிகளும் சுகம்பெறவாளும் ஆளுகை முக்கியமானதா அன்றேல் சுயசாதியோர்களை மட்டிலும் சீர்படுத்திக்கொண்டு ஏனைய சாதியோரை இடுக்கஞ்செய்யும் ஆளுகை முக்கியமானதா என்றுணர்ந்து சுயராட்சியமென்னும் வார்த்தையை மறந்தும் பேசாமலிருப்பது அழகாம்.

- 3:5; சூலை 14, 1909 -


64. இராயல் ஆர்ஸ் ஆர்ட்டில்லரி

சிலவருஷங்களுக்குமுன் செக்கன்ட்ராபாத்திலிருந்து ஓர் ஜெனரல் சாதிபேதமற்ற திராவிடர்களில் தக்க சுகதேகிகளாயிருப்பவர்களைப் பொறுக்கியெடுத்து ஆர்ட்டில்லேரி உண்டுசெய்யும்படி ஆரம்பித்தார்.

அவ்வகை ஆரம்பித்தவர் குதிரைகளையேறி சவாரிசெய்யும் விஷயத்திலும், பீரங்கிகளைத் திருப்பி மாற்றுவதற்கும், நிறுத்துவதற்கும், மருந்துகளை கெட்டித்து சுடுவதற்கும் உள்ள வல்லபத்தையும், தைரியத்தையும், யுக்தியையும், இராஜவிசுவாசத்தையும் ஆராய்ச்சி செய்தே ஆரம்பித்தார்.

சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள்ள வல்லபத்தையும், தைரியத்தையும், பக்தியையுங் கண்டுகொண்டபோதிலும் இராஜவிசுவாசிகளென எவ்வகையில் கண்டுகொண்டாரென்பீரேல்,

வங்காள மியூட்டினி நடந்தகாலத்தில் ஒவ்வோர் துரைமக்களுக்கும் அரண்மனை உத்தியோகஸ்தர்களாகச் சென்றவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களேயாகும்.

அந்த யுத்தத்திலிருந்த துரைமக்கள் அந்த மியூட்டினியாகிய யுத்தகளங்களுக்குச் செல்லுங்கால் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் சொத்துக்களையும் இந்த ஏழைமக்களையே நம்பிவிட்டுப் போவதுமன்றி