பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 225

வெடிகுண்டு முதலியவைகளை அந்தரங்கத்திற் செய்வோர்களையும் இராஜாங்கத்தோர்மீது விரோதத்தை உண்டுசெய்யத்தக்கப் போதனைகளைச் செய்து இரகசியக் கூட்டங்கள் கூடுவோரையும், திட்டமாகத் தெரிந்து கோர்ட்டு விசாரிணைச் செய்யாமலே தண்டிக்கத்தக்க ஓர் சட்டத்தை வகுத்து வடநாடுகளில் நிறைவேறிவந்தது. அதே சட்டத்தை நமது சென்னை ராஜதானிக்குங் கொண்டுவந்து விட்டார்கள். காரணம் சுயப்பிரயோசனத்தைக் கருதும் இராஜத்துரோகிகளும், தேசத்துவேஷிகளும் இந்தியாவில் நாளுக்குநாள் தோன்றுகிறார்களென்பதேயாம்.

நமது கருணைதங்கிய கர்ஜன் பிரபு இராஜப்பிரதிநியாக இந்தியாவுக்கு வந்திருந்த காலத்தில் இத்தேசக் குடிகளின் நன்றியறிதலையும் இராஜ விசுவாசத்தையுங் கண்டு மிக்கப் புகழ்ந்திருந்தார். சிலநாளைக்குள் சொற்ப இராஜதுரோகிகள் செய்துவந்த சீர்கேட்டினால் இந்தியர் யாவரையும் பொய்யரென்றும் நன்றியற்றவர்களென்றும் தீர்த்துவிட்டார். அவர் கூறியவற்றிற்குப் பகரமாக வடயிந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் நிறைவேறிவந்த இராஜத் துவேஷச் செயல்களே போதுஞ் சான்றாயின.

முப்பது பெயர் கூடி செய்யும் இராஜ துரோகச் செயலால் முப்பது கோடி மக்கள் இராஜத்துரோகப் பெயரை வகிக்காதிருக்க வேண்டுமாயின் துரோகிகளின் செயலையும், துரோகிகளையுங் கண்டவுடன் அதிகாரிகளிடம் பிடித்து ஒப்பித்துவிடுவார்களாயின் முப்பது பேர் கூடி செய்யும் துரோக தோஷமானது முப்பது கோடி ஜனங்களைச் சாராது மிக்க விசுவாசிகளென விளங்கும். இத்தேசத்திலுள்ள விவேகிகளும், கனவான்களும் ஒன்றுகூடி இராஜதுரோகிகளையும், தேசத் துவேஷங்களையுங் கண்டுபிடித்து உடனுக்குடன் இராஜவதிகாரிகளிடம் ஒப்பித்து விடுவார்களாயின் கருணை தங்கிய இராஜாங்கத்தோரிடம் இத்தேசத்தோர் இராஜ விசுவாசிகளென்று நற்பெயரெடுப்பதுடன் தற்காலம் ஏற்படுத்தியுள்ள சட்டங்களையும் எடுத்து விடுவார்கள்.

அங்ஙனம் இராஜதுவேஷிகளைக் கவனியாமலும், இராஜதுவேஷிகளின் செயல்களைக் கண்டும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமலும், கண்டு பிடிக்காமலும் நமக்கென்னவென்று இருந்து விடுவார்களாயின் இரும்புக்கு உண்டா மடிதுரும்பையும் நசித்துவிடுவது போல சகல மக்களையும் இராஜத்துவேஷிகளென்று கூறுதற்கு ஏதுவாகிவிடும்.

ஆதலின் நமது தேசத்தோர் இராஜ துரோகிகளைக் கண்டுபிடித்து உடனுக்குடன் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவார்களாயின் துற்கிருத்தியமுள்ளோர் யாவரும் நீங்கி நற்கிருத்தியம் பெருகி குடிகளுங் கோனுங் கவலையற்ற வாழ்க்கை பெறும்.

- 3:32; சனவரி 18, 1910 -


107. டாக்டர் டி.எம் நாயர்

டாக்டர் டி.எம். நாயரவர்கள் இந்துக்களுடைய குணங்களைப்பற்றி சென்ற வாரத்திய இங்கிலீஷ் பத்திரிக்கைகளில் வெளிப்படுத்தினதை நாம் கவனிக்கும்போது அவர் உத்தமமாக இவர்களுடைய குணத்தை தெரியப்படித்தினதினால் நாம் சந்தோஷப்பட வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில், இந்துதேசத்திலிருக்கும் ஜனங்கள் தாங்கள் சொன்ன வார்த்தையின் படி நடக்காதிருப்பது சகஜமான குணம். இவ்வகைத்தான குணங்களை உடையவர்களுக்கு நல் அந்தஸ்தும், அதிகாரமுமுள்ள உத்தியோகங்களைக் கொடுப்பதினால் என்ன துன்பம் மற்றவர்களுக்கு லேசாக நேரிடுமென்பதற்கு நாம் கூறவேண்டியதில்லை. ஏனெனில், இவர்களுக்கு மற்றவர்களிடத்தில் அன்பு இல்லாததினால் இம்மாதிரியான குணம் பதியப்பட்டிருக்கின்றன. இப்படி அன்பில்லாதவர்களுக்கு சுயராட்சியம் கொடுத்தால் இவ்வூர் ஜனங்களுக்கும், சுயராட்சியம் கொடுக்கப்பட்ட இங்கிலீஷ்