பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை / xxxvii


“.... சாதி வேஷத்தை பெருக்கியும், பொய்யைச் சொல்லி மதக் கடைகளைப் பரப்பிப் பொருள் சம்பாதித்தும் பொய்யைச் சொல்லி ஆடு மாடு குதிரைகளை நெருப்பிட்டு வதைத்து தின்று வந்தவற்றை சமண முநிவர்கள், பௌத்தக்குடிகளும் ஆயாசமுற்று கண்டித்தும் துரத்தியும் வந்த காலத்தில் நூதன வேஷ சாதியோர் மித்ர பேதத்தாலும் வஞ்சினத்தாலும் பொறாமெயாலும் அக்காலத்திலிருந்த சிற்றரசர்களையும் பெருந்தொகைக் குடிகளையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு சமண முனிவர்களையும் அவர்கள் கட்டிடங்களையும் அழித்து வந்ததுடன் பெரும்பாலும் அவற்றுள் அடுக்கிவைத்திருந்த சுவடிகளையே கொளுத்தி நாசம் செய்துவிட்டார்கள்” (தமிழன் - 12.3.1913)

என்று வந்து குடியேறியவர்களாலும் அந்நிய நாட்டவராலும் இலக்கியம், மருத்துவம், கலை போன்ற செல்வங்கள் அழிக்கப் பட்டதை நினைவுகூறும் அயோத்திதாசர், இழந்தவைபோக சில நூல்களை தாழ்த்தப்பட்டுவிட்ட ஆதிதிராவிட பௌத்தர்கள் அச்சிட்டு வெளிக் கொண்டு வந்திருப்பதையும் கூறுகிறார்.

“பெளத்தர் குடிகள் யாவரையும் தாழ்த்தி தாழ்ந்த சாதியாரென வகுத்து பலவகையாகத் துன்பங்களைச் செய்து தேசம்விட்டு தேசம் துரத்திய போதிலும் தங்கள் தங்கள் கையிருப்பில் இருந்த நீதி நூற்கள், ஞான நூற்கள், சோதிடநூற்கள் யாவுமே தற்காலம் அச்சுக்கு வெளிவந்து பூர்வ வைத்தியத்தில் அரைக்கால் பாகம் தாழ்ந்த சாதியாரென்று வகுக்கப்பட்ட கூட்டத்தோர்களாலேயே பரவி வருகிறதன்றி, பூர்வ நூற்களையும் அவர்கள் அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறார்கள்.

அவற்றுள் எனது பாட்டனார் ஜார்ஜ் ஆரிங்டியன் துரை பட்ளர் கந்தப்பன் என்பவர் ஓலைப் பிரிதியாயிருந்த திரிக் குறளையும், நாலடி நானூரையும், ஈஸ்ட் இன்டியன் கம்பனியார் காலத்தில் தமிழ்ச் சங்கம் கூட்டி வைத்த கனம் எல்லீஸ் துரை அவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வந்திருக்கின்றது.

போகர் எழுநூறு, அகஸ்தியர் சிமிட்டு ரத்தினச் சுருக்கம், புலிபாணி வைத்தியம் ஐந்நூறு, அகஸ்தியர் பரிபாஷை ஐந்நூறு, பால வாகடம் மற்றும் நூல்கள் எமது தமிழாசிரியர் தேனாம்பேட்டை வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதர் அவர்களால் அச்சிட்டு வெளிவந்திருக்கின்றன.

இச்சென்னையில் பர்ஸுவேலையர் தமிழ்ப்பத்திரிகை வெளிவருவதற்கு முன் புதுப்பேட்டையில் “சூரியோதயப் பத்திரிகை” என வெளியிட்டுவந்த திருவேங்கிடசாமி பண்டிதர் அவர்கள் சித்தர்கள் நூற்களையும், ஞானகும்பிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்நூரையும், தன்வந்திரியர் நிகண்டையும் அச்சிட்டுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறார்” (தமிழன்- 25.2.1914)

என்று பட்டியலிட்டு ஆதிதிராவிடப் பெரியார்கள் பல இடையூறுகளுக்கு இடையிலும் தமிழுக்குத் தொண்டாற்றியிருப்பதைப் பெருமையோடு குறிப்பிடுகிறார். கல்வியறிவு படைத்த அறிவாளிகளாலும், தமிழ் பற்றாளர்களாலும் இத்தொண்டைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆதிதிராவிடர் கல்வியறிவற்றவர்களாகவே இருந்தவர்கள் என்று ஆணவத்தோடு எண்ணியவர்க்கும் கூறுவோருக்கும் பண்டிதரின் இந்தச் செய்தி நல்ல படிப்பினையாகும்.

அயோத்திதாசர் தமிழ் எழுத்துகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தார். இது படிக்காத மக்களும், சிறிது படித்து அதை பிறர்க்கு கூறவும், கூறக் கேட்டவர்க்குப் புரியவுமாக இருக்க வேண்டும் என்பது அவர் எண்ணமாகும். அவர் நடத்திய தமிழன்வாரப்பத்திரிகையில் அவர் ஆண்ட சொல்லாட்சி (தமிழன் - 30.12.1908) இதை உறுதிப்படுத்துகிறது. உதாரணமாக அரையன் என்பதை ‘அரயன்’ என்றும், பழைய என்பதை ‘பழய’ என்றும் ஒற்றுமை என்பதை ‘ஒற்றுமெய்’ என்றும். மெளனம் என்பதை ‘மவுனம்’ என்றும் எழுதிக் காட்டியிருப்பது சிந்திக்கத்தக்கது. இம்முறையானது எழுத்து