பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 435

தானியங்களை எவ்வகையில் நட்பால் பெருக்கம் உண்டாகும் அந்த தானியத்தை எவ்வகையில் நட்டால் நோயின்றி விளையுமெனத் தனது அறிவிற்கு எட்டிய வரையில் விருத்தி செய்வதுடன் தனக்கு மேற்பட்ட அறிவின் மிக்கோரையும் அடுத்து விசாரித்து தானியங்களை விளைவித்து தான் சுகிப்பதுடன் மற்றய மக்களுக்கும் சீவராசிகளுக்கும் உணவூட்டி சுகிக்கச்செய்வதே தேசத்தினது இரண்டாவது சிறப்பாகும்.

தேசத்தின் சிறப்பில் இதையுமோர் சிறப்பாகக் கூறுவது யாதெனில், உலகிலுள்ள சகல விருத்திக்கும் பூமியின் விருத்தியைக் கருதிநிற்றலே மேலான கருத்தாகும். பூமியின் புற்பூண்டின் விருத்தியும், விருட்சவிருத்தியுங் குன்றிப்போமாயின், சாமிகள் சண்டை நடக்குமா, சாமிகளுக்கு அபிஷேகமுண்டாமா, சாமிகளின் பூசை நிறைவேறுமா, குறுக்குபூசு நெடுக்குபூசுயேறுமா, ஒருபொழுது இரண்டுபொழுது விரதம் நடக்குமா, சுயராட்சியங் கேழ்க்குமா, பள்ளிப்பிள்ளை B.A., M.A., க்குப் படிக்குமா, பெரிய உத்தியோகங் கேட்குமா இல்லை. சருவத்தையும் மறந்து மக்கள் வானத்தையும் பூமியையுமே நோக்குவார்கள். ஆதலின் தேச சிறப்பை நாடும்படியான மக்கள் யாவரும் பூமியின் விருத்தியையே பெரிதாக நாடல் வேண்டுமென்பது துணிவு.

அவ்வகையாக விருத்திபெற்ற தானியங்களை சொற்ப லாபங் கருதி மக்களுக்கு விற்கவும் வாங்கவுமான வியாபாரத்தை விருத்திசெய்து பலதேச சரக்குகளைக் கொண்டு வரவும் தங்கள் தேச சரக்கால் மற்றவர்கள் விருத்திபெறவுமான ஏதுக்களைத்தேடி அதனாலும் தேசத்தை சிறப்படையச் செய்யவேண்டும்.

இத்தகைய விவசாயவிருத்தி, வியாபாரவிருத்தியால் சிறப்படையச் செய்வதுடன் அதனதன் பொருளாதாரங்கொண்டே வித்தியாவிருத்தியாம் கைத்தொழிற்சாலைகளை நகரங்கடோறும் அமைத்து சிறுவர்களுக்குக் கல்விவிருத்தியுடன் கைத்தொழில் விருத்திகளை மேலும் மேலும் பரவச்செய்து சிறுவர்களின் சாதனத்தையுங் கருத்துகளையும் தேச உழைப்பையும் விவசாயவிருத்தி, வியாபார விருத்தி, வித்தியாவிருத்தியிலேயே நிலைக்கச் செய்து மக்களை சுருசுருப்பிலும் ஊக்கத்திலும் விடுவதாயின் தேசமக்கள் சகலரும் சீர்பெறுவதுடன் தேசமும் சிறப்படையும் என்பது சத்தியம். இங்ஙனங் கருதாது எங்கள் சாதிகளே பெரியசாதிகள், எங்கள் சாமிகளே பெரியசாமிகளென்று சொல்லித்திரிவதால் தேசம் சிறப்புக்குன்றும் என்பதே சத்தியம்.

- 6:22: நவம்பர் 6, 1912 -


276. யுத்தபரிதாபம் யுத்த பரிதாபம்

தற்காலம் கிரீக்கர் முதலானோர் கூடி துருக்கியர்மீது படையெடுத்து இருப்பதில் அந்தந்த ராணுவ வீரர்களும் அவர்களுற்றார் பெற்றோரும் கண்கலங்கி கவலையுற்று மாளாதுக்கத்தில் ஆழ்வதுடன் அந்தந்த தேசத்துக் குடிகள் அல்லோலமுற்று பிள்ளைகளை விட்டோடியவர்களும், பெண்களை விட்டோடியவர்களும், வீடுகளை விட்டோடியவர்களும், சேகரித்துள்ளப் பொருட்களை விட்டோடியவர்களும், பண்டுபலாதிகளைவிட்டோடி பட்டிணியுமாய் அலைபவர்களுமான ஓர் பரிதாப நிலைகளை என்னென்று கூறலாம். அங்கங்கு நடக்கும் யுத்த செய்திகளைக் கேட்கும்போதே நமது மனங் கலங்குகின்றபடியால் அந்தந்த தேசக்குடிகளது மனம் எவ்வகை கலங்கி எத்தகைய நடுக்குற்று விளங்குமென்பது ஒவ்வொருவருக்கும் சொல்லாமலே விளங்கும். இத்தகையக் கொடு வினைகள் யாவும் குடிகள் ஒன்றுகூடி அரசரை வருத்திய பயனேயாம்.

அதாவது முன்பு துருக்கி தேசத்தை ஆண்டுவந்த அரசன் மற்றுமுள்ள பேரரசர்கள் யாவரையும் அடுத்து அவர்களிடத்தும் நேயம் பாராட்டி வந்ததுடன் குடிகளிடத்தும் அன்பு பாராட்டி தெய்வபக்தி சீராட்டி தனது செங்கோலை செவ்வனே நடாத்திவந்தார். அத்தகைய அரசனைக் குடிகள் யாவருஞ் சேர்ந்து