பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /649

தொடர்மொழிகளை சேர்த்துவரும்படி பயமுறுத்தியதுமன்றி கல்வியைக் கற்கவிடாமலும், சமணமுநிவர்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவிடாமலுமே மிக்கத் துன்பப்படுத்தி வந்தார்கள்.

வட இந்திரதேச வங்கபாஷைக்காரருள் அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமண முநிவர்கள் ஓதல், ஓதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றலென்னும் அறுவகைத் தொழிற்களை யாதொரு குறைவுமின்றி சரிவர நடாத்திவந்தபடியால் அரயனும் உபாசகர்களும் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சிறப்பைக்கண்டு பாலி மொழியில் சண்ணாளர் சண்ணாளரென சிறப்பித்து வந்தார்கள்.

அத்தகைய சிறந்த கூட்டத்தோர் மத்தியில் மிலேச்ச வேஷப்பிராமணர்கள் சென்று தங்கள் பொய் வேஷங்களையும், பொய்ப்போதகங்களையும் மெய்போல் விளக்கியும் அவர்கள் நம்பாது உபாசகர்களைக்கொண்டு வேஷப் பிராமணர்களை அணுகவிடாது துரத்தி வந்ததினால் அங்குள்ள கல்வியற்ற குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் நாளுக்குநாள் வசப்படுத்திக் கொண்டு தங்களது பொய்யை மெய்யென நம்புதற்காய ஏதுக்களைச் செய்துக் கொண்டு சமணமுநிவருள் சண் ஆளாக விளங்கினோரைக் கண்டவுடன் ஓடுவதும், ஒளிவதும் வேஷப்பிராமணர்களது வேலையாயிருந்தது. அவற்றைக் காணுந் தங்களைச்சார்ந்த கல்வியற்றக் குடிகள் வேஷப்பிராமணர்களை நோக்கி அறப்பள்ளியிலுள்ள சமணமுநிவர்களாம் சண் ஆளர்களைக் கண்டவுடன் ஓடி ஒளிகின்றார்களே அதன் காரணம் யாதென்று கேட்பார்களாயின் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சண் ஆளரென்னும் சிறந்த பெயரை சண்டாளர் சண்டாளரென்னும் இழிபெயரென மாற்றி அவர்கள் மிக்க தாழ்ந்த வகுப்போர் அவர்களை நெருங்கப்படாது, தீண்டப்படாதென்று கூறி தாங்கள் வழங்கிக்கொண்டே நாடோடிகளாகத் திரிந்ததுமன்றி தங்களைச் சார்ந்தவர்கள் நாவிலும் சண் ஆளரை சண்டாளர் சண்டாளரென இழிவுபடக்கூறி முநிவர்களின் சிறப்பைக் கெடுத்துக்கொண்டே வருவதுமன்றி அவர்களது அறப்பள்ளிகளிலுந் தீயிட்டு நீதிநூற்களையும் ஞான நூற்களையும் பாழ்படுத்தி அவர்களது சீரையும் சிறப்பையுங் கெடுத்துக்கொண்டே வருகின்றார்கள். ஈதன்றி வடமேற்கு தேயத்தில் திராவிட பாஷையை கொடுந்தமிழென்றும், செந்தமிழென்றும் வழங்கியவற்றுள் கொடுந்தமிழ் வழங்கும் மலையாளுவாசிகள் முதனூல் ஆராய்ச்சியில் மிக்க சிறந்தவர்களும், அகிம்சாதன்மத்தில் பசுவினது பாலைக்கறப்பினும், அதனது கன்றினை வதைத்ததற்கு ஒப்புமென்றெண்ணி பால், நெய் முதலியதைக் கருதாது தெங்கும் பால், தெங்கு நெய்யையே புசிப்பிக்கும் மேற்பூச்சுக்கும் உபயோகித்துக்கொண்டு கொல்லா விரதத்திலும், சத்தியசீலத்திலும், அன்பின் ஒழுக்கத்திலுமே நிலைத்திருந்தார்கள்.

அத்தகைய மேன்மக்கள் மத்தியில் ஆரியர்களாம் வேஷப்பிராமணர்கள் சென்று பேதை மக்களை வஞ்சித்து கல்வியற்றக் குடிகளை அடுத்து தாங்களே யதார்த்த பிராமணர்களென்றும், தங்களுடைய சொற்களுக்குக் குடிகள் மீறி நடக்கப்படாதென்றும் பயமுறுத்தி பிராமணனென்னும் பெயர் வாய்த்தோன் செய்யத்தகாத வக்கிரமச்செயல்கள் யாவையும் செய்து உத்தம ஸ்திரீகளை விபச்சாரிகளாக்கி அவர்களது நல்லொழுக்கங்கள் யாவையும் கெடுத்து வருவதை மலையாள வாசிகளாம் கொடுந்தமிழ் விவேகிகளறிந்து சத்தியதன்மத்தைக் கெடுக்கும் அசத்தியர்களாம் மிலேச்ச வேஷப்பிராமணர்களை அடித்துத் துரத்தி தங்கள் தேயத்தை விட்டு அப்புறப்படுத்தும் ஏதுவையே பெரிதென்றெண்ணி அவர்களைத் தலைக்காட்டவிடாது துரத்தி சத்தியதன்மத்தை நிலைநிறுத்தி வந்தார்கள்.

வேஷப்பிராமணர்களாய மிலேச்சர்களோ ஆரியக் கூத்தாடினுங் காரியத்தின்மீது கண்ணென்னும் நோக்கம் மாறாது தாங்கள் அனுபவித்துவந்த சுகபுசிப்பும், சுகபோகமும் அவ்விடம் விட்டேகவிடாது சுழண்டுகொண்டே திரிந்து அத்தேய சிற்றரசர்களையும் பேரரசர்களையும் தங்களது வயப்படுத்திக் கொள்ளத்தக்க முயற்சியிலிருந்து அரயர்கள் வயப்பட்டவுடன் தங்களை