பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அதாவது விவேகமிகுத்த நியாயாதிபதிகளே தங்கள் நியாயங்களில் எவ்வளவோ தவறுதல் செய்துவிடுகின்றார்கள். அங்ஙனமிருக்க விவேகமும் கல்வியும் குறைந்த முநிசிப்புகளிடம் சாதிபேதத்தை ஒட்டிய மாஜிஸ்டிரேட் அதிகாரத்தைக் கொடுப்பதனால் இஃது கிராமக்குடிகளை சீர்திருத்துஞ் சட்டம் என்று ஆலோசிப்பதைவிடுத்து கிராமங்களிலுள்ள ஏழைக்குடிகளை ஊரைவிட்டு ஓட்டுஞ் சட்டமென்றே ஆலோசிக்கவேண்டிவரும். இதன் பகரமாய் சிலகாலங்களுக்குமுன்பு கிராமங்களிலுள்ள பெரியசாதிகள் என்போர் ஏழைக்குடிகளில் ஒருவனுக்கு அரையணா ஒரணா விலைபெறுந் தானியங்களைக் கொடுத்துவிட்டு ஒருநாள் முழுமையும் வேலைவாங்கிக்கொள்ளும் வழக்கமாயிருந்தது. தற்காலமோ அவ்வகைக்கில்லாமல் தக்கக் கூலிகேட்டு வாங்கிக் கொண்டு சீவித்து வருகின்றார்கள். இவ்வகையாக ஏழைக்குடிகள் சீர்பெற்று வருங்காலத்தில், தாழ்ந்த வகுப்பாருக்குத் தொழுக்கட்டை என்று ஏற்படுத்திவிட்டாலோ பெரிய சாதி என்ற முநிசிப்பும் பெரியசாதிகள் என்ற கிராமவாசிகளும் ஒன்றுகூடிக்கொண்டு ஏழைக்குடிகளுக்கு இடுக்கண் செய்துவிடுவார்கள்.

எவ்வகையில் என்றால் ஏழைக்குடிகளில் ஒருவனை கிராமவாசி ஒருவன் தருவித்து தகாத வேலையொன்றை செய்யச்சொல்லுவான். அவ்வேலையை செய்யாவிட்டாலோ முநிசிப்பும் அவனும் ஒன்று கூடிக்கொண்டு ஏழையைத் தொழுவில் மாட்டித் துன்பஞ்செய்துவிடுவார்கள்.

இவ்வகைத் தொழுவிற்படும் கஷ்டமான பயம் ஏழைக்குடிகளும் விவேகமற்றவர்களுமாகியவர்கள் மனதிற் பதிந்துவிடுமானால் தொழுவில் வாதைப்படும் பயத்தினாலேயே அவர் சொன்னவேலை யாவையுஞ் செய்யமுயலுவார்கள். அவ்வகைச் சொல்லும் ஏவல்களில் கிராமவாசிகளுக்கும் முநிசீப்புக்கும் விரோதியாயுள்ள தாசில்தாரையேனும் கலைக்ட்டரையேனுந் துன்பஞ்செய்யும்படி ஏவலிடுவார்களாயின் ஏழைக்குடிகள் அந்த ஏவலை நிராகரிப்பார்களானால் வேறுவேறு குற்றங்களைச்சாட்டி தொழுவில் மாட்டித் துன்பஞ் செய்துவிடுவார்கள். ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் இதுவிஷயத்தை நன்காலோசித்து உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்னுஞ் சட்டங்களை வகுக்காமலும் சிவில் வியாஜயத்தை நடத்தும் முநிசீப்புகளிடம் கிரிமினல் அதிகாரங்களைக் கொடாமலும், கிராமாதிகாரச் சட்டங்களைப் புதுப்பிப்பார்கள் என்று நம்புகிறோம்.

- 1:44; ஏப்ரல் 15, 1908 -


8. மிஸ்டர் கேயர் ஆர்டியும் இந்தியர் சுயராட்சியமும்

மிஸ்டர் கேயர் ஆர்டி அவர்கள் இங்கிலாந்து சேர்ந்தவுடன் அவ்விடமுள்ள இந்தியர்கள் சார்பாம் ஆங்கிலேயர்களைத் தருவித்து ஒரு கூட்டம் இயற்றி இந்தியர்களுக்கு சுயராட்சியங்கொடுக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி ஆலோசிக்கப்போவதாய்க் கேழ்வியுற்று மிக்க ஆட்சரியப்படுகின்றோம். அதாவது இந்தியாவில் பிராமணரென்னும் பெயர்வைத்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பிரிவுகளிருக்கின்றது. க்ஷத்திரியரென்று பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பிரிவுகளிருக்கின்றது. செட்டிகள் என்பார்களில் எத்தனைப் பிரிவுகளிருக்கின்றது. முதலியார் என்பார்களில் எத்தனைப்பிரிவுகள் இருக்கின்றது. ஒரு பாப்பான் வீட்டில் மற்றொரு பாப்பான் சாப்பிடமாட்டான். ஒரு பாப்பான் பெண்ணை மற்றொரு பாப்பான் கொள்ளமாட்டான். இப்படியாகப் பலவகை ஒற்றுமெய்க் கேடாகும் ஆயிரத்தெட்டு சாதிகளுடன் வடதேசங்களிலிருந்து இத்தேசத்தில் வந்து மலமெடுக்குந் தோட்டிகளுக்கும் சாதிகளுண்டென்று ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வகை சாதியேற்பாட்டில் எந்தசாதியோர்களை இந்தியரென்று தெரிந்து கேயர் ஆர்டி. துரையவர்கள் யாருக்கு சுயராட்சியம் வாங்கிக் கொடுக்கப்