பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 673


இந்திரர்தேச முழுவதும் சத்தியதன்மம் நிறைந்திருந்தகாலத்தில் அவனவன் சாதிக்கும் பாஷையையே சாதனமாகக் கொண்டு நீரென்னசாதியென வினவும் மொழிக்கு ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென அவரவர்கள் சாதிக்கும் பாஷையையே மொழிந்து வந்தார்கள். காணாதோன் நிறத்தை அறிவதற்கு அவனென்ன வருணமென்று கேட்பார்களாயின் கருப்பும் சிவப்புங் கலந்த வருணம், வெள்ளையும் சிவப்புங் கலந்த வருணமென அவனவன் நிறங்களை வழங்கிவந்தார்கள். சாதித்தலாலுண்டாய சாதியென்னு மொழியின் அந்தரார்த்தமும், நிறத்தினால் உண்டாயவருணமென்னு மொழியின் அந்தரார்த்தமும் தொழிற்பெயர்களின் அந்தரார்த்தமும் அறியாது ஆதாரமற்ற அதன்ம நூலை உண்டு செய்துக்கொண்டு அதையே தன்ம நூல் தன்மநூலென்னும் வழக்கத்தில் கொண்டுவந்துவிட்டார்கள்.

தன்ம நூலென்றும், தன்மசாஸ்திரமென்றும் இஸ்மிருதிகளென்றும் வழங்கிவந்த மொழிகளானது சங்கங்கள் தோருமுள்ள சமணமுனிவர்களாலும் பெளத்த உபாசகர்களாலும் வழங்கி வந்துள்ளவைகளாதலின் இவர்கள் கூறிவரும் மநுதன்ம நூலும் அதுவாக்கும் என்றெண்ணி கல்வியற்றக்குடிகள் அநுசரித்துக்கொண்ட போதினும் தட்டிக் கேழ்க்கும் சமணமுனிவர்களிராது வடமொழிக்குந் தாங்களே அதிபதிகளென்னும் சாய்க்காலையும் வெட்டிக் கொண்டார்கள்.

அத்தகைய வடமொழி சாய்க்காலோ சட்டம் சிலருக் கெழுதப்படிக்கக் கூடியதாயினும் பௌத்ததன்ம ஞானார்த்தங்களும் பௌத்ததன்ம சாதனங்களும், பெளத்த தன்ம அநுபவங்களும் அவர்களுக்கு விளங்கவேமாட்டாது. அங்ஙனம் விளங்கியிருக்குமாயின் இவர்களது சுயப்பிரயோசனத்துக்காக எழுதிவைத்துக் கொண்ட அதன்ம நூலை தன்மநூலென மறந்தும் வழங்கமாட்டார்கள்.

பெளத்தர்களின் மநுதன்மநூலானது மநுக்கள் மதுவை அருந்தி மதிமயங்கி கெடாமலும், பொய்யைச் சொல்லி மெய்ப் பொருளுணராமலும், அன்னியர் பொருளை வவ்வி அவாவைப் பெருக்காமலும், சீவர்களை வதைத்துக் காருண்யத்தை அழிக்காமலும், அன்னியர் தாரங்களை இச்சித்து தேகத்தைப் புண்படுத்தாமலும், தங்களைப் பாழ்படுத்திக்கொள்ளாது மானியாய் உலகத்திலுலாவி மநுபுத்திரன் மானிடனென்னும் பெயரைப் பெறுவதுடன் தனது நல்வாழ்க்கை, நந்நெறி, நல்வாக்கு, நற்சேர்க்கை, நற்பழக்கம், நற்கேழ்வி முதலியச் செயல் விருத்தியால் தேவர்களெனக் கொண்டாடப்பெற்று பரிநிருவாணமுற்று வானவர்க்கு அரசனாம் நற்சேத்திர புத்தேளுலகும் பெறுவார்களென்பதும் சத்தியம்.

இத்தகைய அரியச்செயல்களை அடக்கியுள்ளதும் ஞானாசிரியர்களால் நன்மாணாக்கர்களுக்குப் போதித்து ஞான நிலைப்பெறச்செய்வதுமாய இஸ்மிருதிகளாம்தன்ம நூற்களின் மகத்துவங்களை உணராது மநுமக்களின் ஒற்றுமெக்குக் கேடாய வருணாசிரமங்களை சொல்லும்படி ஓர் ரிஷியைக் கேட்டதாகவும் அவர் வருணாசிரம தன்மங்கள் ஓதியதாகவும் வரைந்து வைத்துள்ளார்கள். உலகத்தில் தோன்றும் பொருட்களும், அழியும் பொருட்களும் பிரத்தியட்ச காட்சியாயிருக்க வருணாசிரம் தோற்றத்தை மட்டிலும் ஒருவன் கேழ்க்கவும், மற்றவன் சொல்லவு மேற்பட்டது மிக்க விந்தையேயாம். ஈதன்றி தன்மமென்னும் மொழியானது சீவராசிகளீராக மநுமக்கள்வரை பொதுவாயுள்ளதேயாம்.

அத்தகைய தன்மமெனும் மொழியின் சிறந்த கருத்தினையறியாது அவர்களெழுதி வைத்துக்கொண்ட மநுதன்மத்தைப்பாருங்கள். ஓர் சூத்திரனெனவகுக்கப்பட்ட மனிதன் பிராமணனென வகுத்துக்கொண்ட மனிதனின் ஆசனபீடத்தில் உட்கார்வனாயின் அச்சூத்திரனுக்கு இடுப்பில் சூடுபோட்டேனும் அவனது ஆசனத்தில் சிறிதறுத்தேனும் ஊரைவிட்டு துரத்தி விட வேண்டியது இதுவுமோர்மநுதன்மம்.

ஓர் சூத்திரனென்போன் பிராமணனென்போனைப் பார்த்துக் காரியுமிழ்ந்தால் அவன் இரண்டு உதடுகளையும் அறுத்துவிட வேண்டியது.