பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 675

முத்துசாமி யென்னும் க்ஷத்திரியனாயின் அவன் முத்துசாமி வர்மாவென்றும், முத்துசாமி என்னும் வைசியனாயின் அவன் முத்துசாமி பூதியென்றும், முத்துசாமி என்னும் சூத்திரனாயின் அவன் முத்துசாமி தாசென்றும் தங்கள் தங்கட் பெயர்களினீற்றில் வருணாசிரமத்திற்குத் தக்கத் தொடர்மொழிகளை சேர்த்து வர வேண்டுமென்னும் நிபந்தனைகளை வரைந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வகை எழுதியுள்ள சட்டதிட்டங்களை ஒருவருஞ் சட்டைசெய்யாது தங்கள் தங்கள் மனம்போனவாறு ஐயரென்றும், அய்யங்காரென்றும், பட்டரென்றும், ராவென்றும், சிங்கென்றும், நாயுடென்றும் முதலி யென்றும், ரெட்டி யென்றும், செட்டி யென்றும், வெவ்வேறு தொடர்மொழிகளை சேர்த்துக்கொண்டார்கள். இத்தகையப் பெயர்களை சேர்த்துக்கொண்டதற்கு இவர்களுக்கோர் ஆதாரமும் கிடையாது. நான்கு வருணாசிரமத்திற்கும் நாங்கள் வைத்துள்ள பெயர்களை வையாது நீங்கள் வெவ்வேறு பெயர்களை வைக்கலாமோவென்று கேட்பதற்கு அம்மனுதன்மசாஸ்திரத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் அதிகாரங் கிடையாது.

கொழுத்தப் பசுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு எதேஷ்டமாகத் தின்பதற்கு பிரம்மாவானவர் பசுக்களை எக்கியத்திற்கே சிருஷ்டித்திருக் கின்றாரென்று இம்மநு நூலில் எழுதிவைத்துக்கொண்டவர்கள், பௌத்தர்களது தேசத்தில் பசுவைக் கொல்லும் எக்கியத் தொழிலை மறந்தே விட்டுவிட்டார்கள். இவர்கள் எழுதியுள்ள படி பிரம்மாவானவர் எக்கியத்திற்கென்றே பசுக்களை சிருஷ்டித்துள்ளது எதார்த்தமாயின் இவர்களும் விட்டிருப்பார்களோ. பிரம்மசிருட்டி கருத்தும் பழுதாமோ, இல்லை. தங்கள் புசிப்பின் பிரியத்தை பிரமன் மீதேற்றி வரைந்து வைத்துக் கொண்டபோதினும் கொன்றுத் தின்னாமெயாகும் பௌத்தர்களது மத்தியில் அந்நோர் பிரமத்தின் கருத்தும் அடியோடழிந்துபோய்விட்டது.

பல பாஷையோருள்ளும் பல தேசத்தோருள்ளும் பலமதத்தோருள்ளும் வேஷப்பிராமணர்கள் தோன்றிவிட்டபடியால் அவரவர்கள் மனம்போல் எழுதிக்கொண்ட வேதங்களும், மனம் போல் எழுதிக்கொண்ட வேதாந்தங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட புராணங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட தன்மங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட கடவுளர்களும் ஒருவருக்கொருவர் ஒவ்வாது மாறுபட்டுள்ளபடியால் ஒருவருட்பார் எழுதிக்கொண்ட கட்டளைகள் மறுவகுப்பாருக்கொவ்வாமலும், ஒருவகுப்பார் தெய்வம் மறுவகுப்பாருக்கொவ்வாமலும் கலகங்களுண்டாகி வேறுபடுவதுடன் நூதனமாக ஏற்படுத்திக்கொண்ட மநுதன்ம சாஸ்திரத்தையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாதும், சாதி தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொள்ளாதும், சணப்பனார் பூணுநூல், ஆட்டுமயிரின் பூணுறூற்களைத் தரித்துக்கொள்ளாதும் அதனுள் விதித்துள்ள தண்டனைகளை ஏற்றுக்கொள்ளாதும் நீக்கிவிட்ட போதினும் மநுதன்ம நூல் மநுதன்மநூலென்னும் பெயரினை மட்டிலும் வழங்கிவருகின்றார்கள்.

தன்மதத்திற்குரிய எதார்த்த நூலாயின் இத்தேசத்தோரொவ்வொருவருங் கைசோரவிடுவார்களோ, ஒருக்காலும் விட மாட்டார்கள். புத்ததன்மத்தை அநுசரித்துக் காலமெல்லாம் நிதிமார்க்கமாம் ஒற்றுமெயிலும், அன்பிலும் இருந்தோர்களை அதன்மத்தில் நடக்கும்படி ஏவுவதாயின் அத்தன்மத்துள் சம்பந்தப்பட்டவர்களே சம்மந்திப்பார்களன்றி ஏனைய தன்மப்பிரியர்கள் ஒருக்காலும் ஏற்காரென்பது திண்ணம்.

அவ்வகை ஏற்கா விஷயத்தை எவ்வகையால் அறிந்துகொள்ளவேண்டும் என்னில் வடமொழியாம் சகடபாஷையால் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். தென்மொழியாம் திராவிடபாஷையால் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். கொடுந்தமிழாம் மலையாளுபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன்