பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 681

தானிய வியாபாரஞ் செய்வோரை பூவைசியரென்றும், பொருட்களைக் கொடுத்து பணம் பெற்று வியாபாரஞ்செய்வோர்களை தனவைசியர்க ளென்றும், வடமொழியில் வழங்கியதுமன்றி தென் மொழியில் எண்ணெய், ஆமணக்கு நெய், தென்னெய் வியாபாரிகளை எண்ணெய் வாணியர், எண்ணெய் வாணிபரென்றும், சுங்கச்சாவடிகளில் உட்கார்ந்து சுங்கமாம் ஆயம் வாங்குவோர்களை தேச ஆயச்செட்டிகளென்றும் நாடுகளிலுள்ள கோட்டைக்குள்ளிருந்து வியாபாரஞ்செய்பவர்களுக்கு நாட்டுக்கோட்டைச் செட்டிகளென்றும், ஒரே இடத்திற்றங்கி நவரத்தின வியாபாரஞ் செய்வோர்களுக்கு ரெட்டிகளென்றும் பலதேசங்களுக்குச்சென்று பலசரக்கு வியாபாரம் செய்வோர்களுக்கு பரதரென்றும் வழங்கி வந்தார்கள். பூர்வ திராவிடர்கள் தற்கால சாதிபேதமென்னுங் குரோதச் செயலைப் பெற்றவர்களாயில்லாமல் சகல தேசங்களுக்குஞ் சென்று தங்கள் வியாபாரங்களை விருத்தி செய்துவந்ததுமன்றி புத்ததன்மமாம் நீதிநெறி ஒழுக்கங்களையும் பரவச்செய்து புத்த சங்கங்களையும் நாட்டியிருக்கின்றார்கள். இவற்றிற்கு ஆதாரமாகக் கொளம்போசுக்கு முன்பு அமெரிக்காவுக்கு திராவிடர்கள் சென்று புத்தரங்கத்தை நாட்டியுள்ள ஆதாரம் அவ்விடம் வழங்கிவரும் சாக்கையபுரம், கெளதமாலயம் என்னும் பெயர்களே போதுஞ் சான்றாம்.

நான்காவது, பயிரிடுதல் என்னும் வேளாளத்தொழிலை ஆலோசிப்போமாக. பூர்வகாலத்தில் சாதிபேதமற்ற திராவிடர்களே பூமியை உழுது சீர்திருத்தி பயிரிட்டு சருவ சீவராசிகளுக்கும் உபகாரிகளாகவும் உதவியாளராகவும் இருந்தபடியால், வேளாளரென்றும், காராளரென்றும், சீராளரென்றும், பூபாலரென்றும், பண்ணைக்காரரென்றும், வழங்கப்பெற்றிருந்தார்கள். சாதிபேதமற்ற திராவிடர்களே வேளாளரென்னுந் தொழிற்பெயர் பெற்று பூமியை உழுது, சீர்திருத்தி, தானியங்களை விளைவித்து, சகலருக்கும் உபகாரிகளாக விளங்கியவற்றை க்ஷ யாரால் இயற்றியுள்ள இராமாயண காவியத்திலும், ஏரெழுபதிலும் வரைந்துள்ள சடையன், சடையப்பன் என்பவன் சரித்திரத்தால் அறிந்துக்கொள்ளுவதுடன் தற்காலம் பூமியை உழுது பண்படுத்தி தானியங்களை விளைவித்து விருத்தி செய்வதற்காய் உழைத்து இரவும் பகலும் பாடுபடுகின்றவர்கள் யாரென்றுங் கண்ணாரக்கண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

ஆதலால் இந்திய தேசத்தின் பூர்வசீர்திருத்தக்காரர்களும், சீர்திருந்தியவர்களும் சாதிபேதமற்ற திராவிடர்களாகவே விளங்கி தற்காலத் தோன்றியுள்ள சாதிபேதத் தலைவர்களின் மித்திர பேதத்தாலும் சத்துரு நாசத்தாலும் பூர்வநிலை குலைந்து, நசிந்து இந்தியதேச சிறப்புமழிந்து பாழடைந்துவருங்காலத்தில் “காய்ந்துபோம் பயிறுக்குத் திதிமழைப் பெய்து” கார்த்ததுபோல் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி மறுபடியும் இந்திய தேசத்தை சீர்படுத்திவருவதினால் சாதிபேதமற்ற திராவிடர்களும் சொற்ப சீர்பெற்று வருகின்றார்கள்.

இத்தகைய பெருங்கருணை கொண்டு இந்தியாவையும் இந்தியர்களையும் சீர்திருத்தி செவ்வைசெய்ய முயன்று கைத்தொழிலையும், விவசாயத்தையும் விருத்தி செய்துவரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தார் கிருபாநோக்கம் வைத்து பூர்வத்தில் கைத்தொழிலிலும், விவசாயத்திலும் விருத்திப்பெற்ற உழைப்புள்ளக் கூட்டத்தார் யாரென்று கண்டறிந்து அக்கூட்டத்தில் வாசித்துள்ளவர்களையும் உழைப்பாளிகளையுமே தெரிந்துதெடுத்து கைத்தொழிற்சாலை, விவசாயசாலை இவைகளின் உத்தியோகஸ்தர்களாகவும் உழைப்பாளிகளாகவும் நியமிப்பார்களாயின் பிரிட்டிஷார் எடுத்துள்ள வித்தை, விவசாய முதலியது விருத்திப்பெற்று நாளுக்குநாள் சிறப்படைவதுடன் சாதிபேத சத்துருக்களால் நசுங்குண்ட ஏழைகளும் சுகம்பெற்று நன்றியறிதலாய் தங்கள் விருத்திக்காக இராஜாங்க விருத்தியை மென்மேலுங் கோரி இராஜவிசுவாசத்தில் நிலைத்து எங்கும் இராஜவிசுவாசத்தைப் பரவச்செய்வார்கள்.

- 4:3; சூன் 29, 1910 -