பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

706 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அக்குறுக்குப் பூசுவதிலுங் குழைத்துப் பூசுவதே வித்தை, நெடுக்குப்பூச்சு பூசுவதே வித்தை, அந்நெடுக்குப் பூச்சிலும் மஞ்சள் வருணம் பூசுவதோர் வித்தை, கொட்டைக்கட்டும் வித்தை அதிலும் ஆறுகீற்று ஏழுகீற்று பார்த்து கட்டும் வித்தை, இத்தகையாகத் தனக்கும் பலனற்று தன்தேசத்தோருக்கும் பலனற்றப் பாழுஞ் செய்கைகளாம் வித்தைகளே பெருகிவருகின்றதன்றி வேறொன்றுங் கிடையாவாம். பூர்வ பௌத்தர்கள் கண்டுபிடித்திருந்த நீரிரைப்பிற்குமேல் வேறு இரைப்புக்கிடையாது. பழைய கலப்பைக்கு வேறு கலப்பைச் செய்யும் வித்தை விருத்திகிடையாது. பழைய சம்பான் குடைக்கு மேல் வேறு குடை கிடையாது, நெருப்பை உண்டு செய்யும் சக்தியுக்குங் கல்லைப்போல் மற்றுஞ் சக்கிக் கிடையாது, பழைய கெந்தகக் குச்சிக்குமேல் வேறு குச்சு கிடையாது. இவைகளுக்கு மேலாய வேறு வித்தைக் கண்டுபிடிக்கும் விவேகங் குறைந்து கொண்டே போவதுடன் பூர்வத்தோர் நெசிந்துவந்த பட்டு வகைகளையும் பருத்தி வகைகளையும் விருத்திச் செய்யும் வித்தைகளையுங் கைநழுவ விட்டொழித்தார்கள்.

இத்தகைய வித்தைகள் விருத்திச்செய்யும் விவேகம் பாழடைந்து போனாலும் வித்தியாகர்வங்கள் மட்டிலும் எங்கு தோன்றுகிறதென்னில், ஐரோப்பியர்களால் நிலைநாட்டியுள்ள இருப்புப்பாதை சாலைகளிலும், நீராவி இயந்திர சாலைகளிலும், மரவேலை சாலைகளிலும், இருப்புவேலை சாலைகளிலும், மருந்து கிடங்கு சாலைகளிலும், மின்சார சாலைகளிலும் ஓர் பெரிய மேஸ்திரியாகி விடுவானாயின் நூதன ஆட்களைக் கண்டவுடன் அவனுக்குண்டாம் மார்புநெளிப்பும், முகசுளிப்புமாகியச் செயல்களினாலேயாம். ஏதுமற்றவிடத்தில் இத்தகைய வித்தியாகர்வம் தோன்றுமாயின் தனது சுய வித்தியாவிருத்தி எங்குபெறக்கூடும். தேசமெங்கும் சுகச்சீர் பெறலாகும் ஐரோப்பியர், அமெரிக்கர், சீனா, ஜப்பானியர் கண்டுபிடித்துவரும் வித்தியாவிருத்தியில் முந்திரி பாகம் விருத்தி பெற்றிருப்பார்களாயின் நாங்கள் பிரம்மா முகத்திற் பிறந்தவர்களல்ல கண்ணினின்று பிறந்தவர்கள் எனப் பெரிய பெரிய வேதங்களையும், பெரிய பெரிய புராணங்களையும் எழுதிவைத்துக் கொண்டு சகலசாதிகளினும் யாங்களே பெரியசாதிகளெனத் துள்ளித் தொப்பென்று விழுந்து குடிமிதட்டி நெளித்து நெளித்து வித்தியா கர்வத்தைக் காட்டுவார்கள். மற்றும் தென்னிந்திய தனகர்வத்தை ஆராய்வோமாயின் இலட்ச திரவியத்திற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றார்களென்பதரிது. அவ்விலட்சத் திரவியமுள்ளோர் வித்தியா விருத்தியிலும் விவசாயவிருத்தியிலும் வியாபார விருத்தியிலும் சேகரித்துள்ளவர்கள் நூற்றில் மூன்று பேரல்லது நான்கு பேரிருப்பார்கள். மற்றும் நூற்றிற்குத் தொண்ணூறு பெயர் வஞ்சத்தாலும், இலஞ்சத்தாலும், குடிகெடுப்பாலும், வட்டியாலும், களவாலும், சூதினாலும், சொத்துள்ளக் கட்டுக்கழுத்திகளை இட்டோடுவதாலும், கைம்பெண்கள் சொத்தை மோசஞ்செய்வதாலும், பொய்யைச் சொல்லிப் பொருள்பரிப்பதாலும் இலட்சத்திற்குட்பட்ட தனவிருத்திப்பெற்றவர்களிருப்பார்கள். இத்தகைய சொற்ப விருத்தியின் கர்வத்தால் முன் பார்த்த நேயர்களைக் காணக் கண் தெரியாமற்போகிறதும், செவிக் கேளாமற்போகிறதும், கைநீட்டி வாட்டம் பேசுகிறதும் நாவானது உறத்து மறத்துப் பேசுகிறதுமாகிய கர்வமே நிறைந்திருக்கும்போது ஐரோப்பியர், அமேரிக்கர், சீனர், ஜப்பானியரைப்போல் இவர் ஐந்து கோடி தனமுடையவர், அவர் பத்துகோடி தனமுடையவர், இன்னொருவர் இருபதுகோடி தனமுடையவர், மற்றுமொருவர் ஐம்பது கோடி தனமுடையவர்கள் இருக்கின்றார்களென்னுந் தனபெருக்கமுள்ளோர் இருந்து விடுவார்களாயின் இவர்கள் தனஞ்சேர்க்கும் வழிவகைகளைக்கொண்டே தேசமக்கள் யாவரும் சுகச்சீரழிந்து பெருந்தனமுள்ளோர் வீதி உலாவிவருங்கால் வழியில் வருவோர் யாவரும் தங்கள் தங்கள் வஸ்திரங்களை இடுப்பில் கட்டிக்கொண்டு கைகூப்பி நிற்கவேண்டும் என்னுங் கட்டளையிட்டு தனக்கர்வக் கொடியை நாட்டிவிடுவார்கள். “இரந்துண்போனுக்கு தனம்பெருகில் ஏசாதெல்லாமேசுவான் பேசாதெல்லாம் பேசுவான்” என்னும் பழமொழிக்கு