பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 43


இப்படியாகத் தங்கள் சுயப்பிரயோசனங் கருதி சருவ சீவர்களையுங் காப்பாற்றும் நவதானியங்களைப் பயிறு செய்யாது தாங்கள் குடும்பம் பசியாறப் புசித்தால் போதும் என்னும் எண்ணத்தால் உள்ள பூமிகளில் எல்லாம் மணிலாக் கொட்டையை விளைத்து வருவதால் அரிசி, கேழ்வரகு, துவரை முதலிய தானியங்கள் விளைவில்லாமல் பஞ்சம் என்று சொல்லும் படியாய் இருக்கின்றது. பெய்திருக்கும் சொற்ப மழைக்குத்தக்கவாறு பலதானியங்களை விளைவித்து இருப்பார்களாயின் இவ்வருஷம் எவ்வகையாலும் ரூபா ஒன்றுக்கு ஆறுபடி ஏழுபடி அரிசி வாங்கக்கூடும். இந்த நெல் முதலிய தானியங்களைக் கவனிக்காமல் மணிலாக்கொட்டை மலப்பில் இருக்கின்றபடியால் நாளுக்குநாள் தானியங்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவ்வகை விலை அதிகரிப்பதால் ஏழைகள் நசிந்து சுகங் குறைந்துக் கொண்டே வருமாயின் சுதேசிகள் வேலை என்ன செய்யும்.

சுதேசிகள் என்று கூச்சலிட்டுக்கொண்டு புரதேச சரக்குகளை (பாய்காட்) செய்வதால் தேசத்தில் பஞ்சம் உண்டாகின்றதா அல்லது சுதேசிகள் என்று சொல்லிக்கொண்டே சுயப் பிரயோசனங் கருதி மணிலாக்கொட்டை விளைவிப்பதால் பஞ்சம் உண்டாகின்றதா என்பதை நாமே சீர்தூக்கி ஆலோசிக்க வேண்டியதாய் இருக்கின்றது.

ஏனெனில் சொந்த பூமிகளை வைத்துக்கொண்டிருக்கும் சுதேச கனவான்கள் யாவரும் சுதேசிகளின் புசிப்பையும் அவர்கள் சுகத்தையும் கருதாமல் சுயப்பிரயோசனங்கருதி பணஞ் சம்பாதிப்பதைக் கண்டிருந்தும் இத்தகைய சுதேசிகள் வசம் சுயராட்சியங் கொடுத்துவிட்டால் ஏதேதுசெய்து ஏங்கவிடுவார்களோ என்பதுதான்.

காங்கிரஸ் சபை என்றும் மஹாஜனசபை என்றும் பெருங்கூட்டங்களிட்டு ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும் பத்து நூறென்னுஞ் சிலவுகளை வைத்துப் பாழ்செய்தவர்கள், சுதேசத்தில் கண்டிருக்கும் பஞ்சத்தையும் அப்பஞ்சம் உண்டாயதற்கு மூலத்தையும் அறியாமல் வீண் சங்கைகளை வளர்த்து குடிகளுக்கும் அரசுக்கும் வீண் விவகாரத்தை உண்டு செய்தது என்னமதியோ விளங்கவில்லை.

நம்முடைய தேசத்தார் மசாணவைராக்கியம் பிரசவ வேதனா வைராக்கியங்களைப்போல் கூட்டவைராக்கியங் கொண்டவர்கள். அதாவது ஓர் கூட்டங்கூடவேண்டும் என்று ஒருவர் அல்லது இருவர் முயன்று ஒவ்வோர் காரியங்களை உத்தேசித்து ஆயிரம் பெயரைக்கூட்டி நடாத்தும் முடிவை நாடுகின்றது. அவ்வகை நாட்டமுருங்கால் முயிற்சியினின்ற ஒருவரோ இருவரோ அயர்ந்துவிடுவார்களாயின் அவர்களுடன் சேர்ந்த ஆயிரம் பெயர்களும் அயர்ந்துவிடுவது சுவாபம்.

அதன் காரணம் யாதெனில் - பி.ஏ., படித்து லாயர்வேலை செய்வதும், எம்.ஏ., படித்து உபாத்தி வேலை செய்வதும், எப்.ஏ., செய்து ரைட்டர்வேலை செய்வதுமாகிய செயல்கள் கல்வியற்றவன் கூலிவேலை செய்வதற்கொப்பாய் தங்கடங்கட் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவதே கண்ணோக்கமாய் உள்ளவர்கள் தேசத்தில் சீர்குலைந்துள்ள சீவர்கள் மீது கண்ணோக்கம் வைப்பார்களோ, ஒருக்காலும் வையார்கள். அவரவர் குடும்பத்தைப் போஷிப்பதே அவர்களுக்குக் கஷ்டம்.

இத்தகைய சீர்திருத்தக் கூட்டங்கள் யாவும் கைத்தொழிலாளரும் வியாபாரிகளும் முன்னின்று செய்யவேண்டும். காரியாதிகள் யாவும் சுயபாஷைகளில் நிறைவேற்றல்வேண்டும். அங்ஙனமின்றி, பி.ஏ. செய்து லாயர்வேலைக்குப்போகாதவரும், எம்.ஏ. செய்து உபாத்தி வேலைக் கிடைக்காதவரும், எப்.ஏ, செய்து ரைட்டர் வேலைக் கிடைக்காதவரும் ஒன்றுகூடி கூட்டங்களை ஆரம்பித்துப் பேசுவதில் அவர் பேசிய இங்கிலீஷில் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசினார், இவர் பேசியதில் (கிராமர்) கவனித்துப் பேசினார் என்னும் டம்பத்தை நோக்குகின்றார்கள் அன்றி, விஷயத்தை