பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஈணாமலடியென்றும் உணர்ந்து பெற்றவள் பால் மகவை அளித்துப் பெறாதவளைப் பிழைக்குள்ளாக்கினார்.

அதுபோல் தற்காலஞ் சுதேசியம் என்னும் கூட்டத்தலைவர்கள் எதார்த்த சுதேசிகளாயிருப்பார்களாயின் குடிகளுக்குத் துன்பம் நேரிடாமல் தங்களுக்கும் அபகீர்த்திவராமல் வீரியத்தை அடக்கிக் காரியத்தின்பேரில் கண்ணோக்கம் வைத்து செவ்வனே சீர்திருத்தி சுதேசீயத்தை நிலைக்கச் செய்வார்கள்.

அங்ஙனமின்றி முன்பின் பாராமலே சிலகாரியங்களைச் செய்து ஏழைகளையும் ஏழைச்சிறுவர்களையும் பாழ்படச்செய்வதைப்பார்க்கில் சுயப் பிரயோசனக் கேட்டால் எதார்த்த சுதேசிகளை கெடுக்குஞ் சமயசுதேசிகள் என்றே தீர்த்தல் வேண்டும்.

அதாவது, கல்கத்தாவில் கவர்னர் ஜெனரலாயிருந்த கர்ஜன் பிரபு அவர்கள் இந்தியாவையும் இந்தியாவிலுள்ளக் குடிகளையும் அவரவர்கள் சிறப்பையும் ஆராய்ச்சி செய்யுங்கால் தங்களாளுகையில் இவ்விடமுள்ள சில சாதியோர்மட்டுஞ் சருவசுகங்களை அநுபவித்து ஏனையசாதியோர் இடுக்கத்தில் இருப்பதை உணர்ந்து சகல சாதியோருஞ் சுகத்தை அனுபவிக்கத்தக்க ஏதுக்களையும் அதற்குத்தக்க சட்டங்களையும் நியமிக்க ஆலோசிக்குங்கால் சுயப்பிரயோசனக் கூட்டத்தார் அதன் சுருக்கம் உணர்ந்து கர்ஜன் பிரபுவின் கண்ணோக்கத்தைக் கலைக்க ஆரம்பித்ததுமன்றி சுதேசியம் என்னும் பொய்க்கூத்திட்டு தற்காலங்குடிகளுக்குள்ள சொற்ப சுகங்களையுங் கெடுக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.

- 1:42: ஏப்ரல் 1, 1908 -

இவர்கள் வாஸ்தவ சுதேசிகளாயிருந்து சுதேசியத்தை நிலைநிறுத்த முயல்வார்களாயின் ஏழைக்குடிகளை முன்னுக்கு இழுத்துவிட்டுத் தாங்கள் பின்னிடையமாட்டார்கள்.

சமய சுதேசிகளாகத் தோன்றினவர்களாதலின் இத்தியாதி கேடுகளை விளைவித்து ஏழைக்குடிகளை இராஜாங்கத்தாருக்கு எதிரிகளாக்கி விடுகின்றார்கள். இதன் பகரமாய் சகலசாதியோரும் ஒற்றுமெயாய்க் கூடியுள்ள நாஷனல் காங்கிரசென்றும் சகல சாதியோரும் சமரசமாய் ஏற்பட்டுள்ள சுதேசியக் கூட்டம் என்றும் வெளிவந்துள்ளவர்கள் எதார்த்த வாதிகளாய் இருப்பார்களாயின் இந்த ஏப்ரல்மீ 4உ சனிவாரம் வெளிவந்த மெயில் பத்திரிகையில் (வில்லேஜ் போலீஸ்) அல்லது வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டென்று குறிப்பிட்டு அவற்றுள் உயர்ந்த சாதியான் தப்பிதம் செய்வானாயின் அவனை சத்திரத்திலேனுஞ் சாவடியிலேனும் சில மணிநேரம் இருக்கச்செய்வதும், தாழ்ந்த சாதியான் தப்பிதஞ் செய்வானாயின் அவனைத் தொழுக்கட்டையில் மாட்டிவைக்கவேண்டுமென்றும் உத்தேசங் கூறியிருக்கின்றார்கள். ஆனால் இவர்களுஞ் சுதேசிகளாம்.

நாஷனல் காங்கிரஸ் நாடோடிகளே, சுதேசிய சூரர்களே, சற்று நோக்குங்கள். பெரியசாதி என்போன் பூசுணைக்காய்த் திருடினால் சிறிய திருட்டு, சின்னசாதி என்போன் பூசணிக்காயைத் திருடுவானாயின் பெரியத்திருட்டாமோ. பெரியசாதி என்போன் நெல்லைத் திருடினால் சொல்லாலடிப்பதும் சின்னசாதி என்போன் நெல்லைத் திருடினால் கல்லாலடிப்பதுபோலும். அந்தோ! கறுப்பர்களுக்கு ஓர் சட்டமும் வெள்ளையர்களுக்கு ஓர் சட்டமும் மாறுபடவேண்டுமோவெனக் கண்டு கேட்டவர்கள் உயர்ந்த சாதியானுக்கு ஓர் சட்டமும், தாழ்ந்த சாதியானுக்கு ஓர் சட்டமும் உண்டாவென உத்தேசிக்க இடம் இல்லாமல் போயதுபோலும்.

இந்த தாழ்ந்தசாதி சட்டத்தையும் உயர்ந்தசாதி சட்டத்தை கர்ஜன் பிரபு கண்ணிற் காண்பாராயின் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரும் மெய்யர்களே. சுதேசிகள் என வெளிவந்தவர்களும் மெய்யர்களே, என்று மெச்சிக் கொண்டாடுவார். வெள்ளையர்களுக்கு ஓர் சட்டமும் கறுப்பர்களுக்கு ஓர் சட்டமும் உண்டோவெனக் கரந்துகரந்து பத்திரிகைகளில் வரைந்தவர்கள் கண்ணுக்குத் தாழ்ந்தசாதி சட்டமும் உயர்ந்த சாதி சட்டமும் தெரிந்தும்