பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதாவது - அவருடைய நீதிபோதனைகளுக்குள்ளும் அவருடைய நன்மார்க்க ஒழுக்கத்திற்குள்ளும் அமர்ந்து ஒழுகுபவனுக்குள் கிறீஸ்த்துவின் அன்பு குடிக்கொள்ளும். அவ்வகைக் குடிகொண்டவனை கிறிஸ்தவன் என்று கூறத்தகும்.

நான் கிறிஸ்தவன் என்று கூறுபவன் தன்னைப்போல் பிறரை நேசிக்க வேண்டியது என்றும் சகலரையும் சகோதிரவாஞ்சையால் ஆதரிக்க வேண்டியது என்றும் கூறியுள்ள அவரது நற்போதனைக்குள் நுழையாமலும் அவர் ஒழுக்க போதனைக்குள் நுழையாமலும் அவர் ஒழுக்கமேரை நடவாமலும் நான் கிறீஸ்தவன் என்று கூறுவது அவர் நீதிபோதகத்திற்கு முரணேயாம்.

ஓர் இராசனென்னும் வேஷம் போடுபவன் அரசசின்னங்களாகும் கிரீடம், புஜகீர்த்தி, வாகுவல்லயம் அணைந்து இராஜன் வந்தானே எனநடிப்பானாயின் எல்லோரும் இராஜன் வந்தான் சரித்திரம் பாடுவானென்று நோக்குவார்கள்.

அத்தகைய அரசசின்னம் இன்றி வெறுமனே ஒருமனிதன் மேடையில் வந்து நிற்பானாயின் இராஜன் யார் இராஜன் யார் என்று சகலரும் கேட்பார்கள். அதுபோல் நான் கிறீஸ்த்தவன் என்று சொல்லும்படியானவன் கிறீஸ்த்துவின் நீதியிலும் அவர் அன்பிலும் ஒழுக்கத்திலும் அமர்ந்திருத்தலே அழகாவதன்றி அவரைக் கனஞ்செய்பவனுமாவன்.

அங்ஙனமின்றி வாய்ச்சொல்லில் கிறீஸ்த்தவன் என்று சொல்லித்திரிவது அவரைக் கனயீனஞ்செய்தலாகும்.

இத்தகையக் கனக்குறைவாய் நான் கிறீஸ்த்தவன் என்பதற்கே செயலற்றவர்கள் செட்டிக் கிறீஸ்த்தவன் நாயுடு கிறீஸ்த்தவன் வேளாளக் கிறீஸ்த்தவன் நாயகர்க் கிறீஸ்த்தவன் என வெளியேறுகிறவர்கள் கிறீஸ்த்துவை என்ன கனஞ் செய்வோராவர்.

கிறீஸ்துவை யதார்த்தத்தில் கனஞ்செய்வோராயின் அவரேந்திய சிலுவையின் ஒடுக்கத்தை இவர்கள் ஏந்தி சருவசீவர்களையும் தன்னைப்போல் பாவித்தல் வேண்டும்.

அங்ஙனமின்றி ஜோசேப்பு செட்டியார், தாவீது முதலியார், சவேரியப்ப நாயுடு என வெளிவருவோர் கிறீஸ்த்துமதப் பெயரையும் பிராமணமத சாதியையும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அஞ்ஞானிகள் என்று கூறுவது என்ன மகிழ்ச்சியோ விளங்கவில்லை.

கிறீஸ்த்துமதத்தில் பிரவேசித்து பிராமண மதத்தைக் கனஞ்செய்வோர் யதார்த்தக் கிறிஸ்த்தவராவரோ.

கிறீஸ்த்துமதத்தில் பிரவேசித்தாலும் எங்கள் சாதியை மறைக்கலாமோ என்பாரும் உண்டு. அச்சாதிப்பெயர்கள் யாவும் ஓர் தேவனால் உண்டு செய்யாமல் தங்களுக்குத் தாங்களே உண்டு செய்துக் கொண்டபடியால் பிராமணமதக் கோட்பாட்டின்படி அவனவன் ஏற்படுத்திக் கொண்ட சாதியை அவனவன் வெளியில் சொன்னால்தான் தெரியும். சொல்லாவிடில் தெரியாது.

இவ்வகை சொல்லிக்கொண்டு திரிவதற்கும் எப்போதும் பார்த்துக் கொள்ளுவதற்கும், பிராமணமதஸ்தர் மநுசாஸ்திரம் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அத்தகைய மனுசாஸ்திரமும் அவர்கள் வேதமும் வேண்டாம் என வெறுத்து கிறீஸ்த்துமதம் பிரவேசித்தவர்கள் பிராமணர் மநுசாஸ்திரத்தை விடமாட்டோம் என்பாரேல் எண்ணத்தால் சிந்திக்கும் அவர்கள் மததேவதைகளை விட்டிருப்பரோ ஒருக்காலும் விட்டிரார்.

ஒவ்வோர் கிறீஸ்த்துமதக் குருக்களும் இவற்றைப் பெரும்பாலும் கவனிக்க வேண்டும்.

ஏனென்பீரேல், உயர்த்தப்பட்டவன் தாழ்த்தப்படுவான் தாழ்த்தப் பட்டவன் உயர்த்தப்படுவானென்னும் உங்கள் வேதவாக்கியம் இருக்கின்றது. ஆதலின் உங்களை அடுத்தக் கிறீஸ்தவர்களுள் பூலோகத்தில் உயர்ந்த சாதிக் கிறீஸ்தவன் என்பவன் பரலோகத்தில் தாழ்ந்த சாதிக்கிறிஸ்தவனாவான்போல் காணுகின்றது. அவ்விடம் அங்ஙனந் தாழ்ச்சியடையாமல் உயர்த்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.