பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 439

சண்டை தொடுத்தும் கோர்ட்டு வழக்கெடுத்தும் வாதிட்டு வருகின்றார்கள். ஆடானது கசாயிக்காரனை நம்பியிருப்பது போல் பேதைமக்கள் பொய்க்குருக்கள் வாய்மொழிகளை நம்பி பொருள் விரயஞ் செய்து வருகின்றார்கள். இவற்றைத் தாங்களும் நம்பி மோசம் போகவேண்டாம்.

- 6:49; மே 14, 1913 –

100.நூதன பௌத்தம்! - நூதன பௌத்தம்!! நூதனபௌத்தம்!!!

இச்சென்னையில் தற்காலம் சாக்கைய புத்தசங்கத்தோர் எனத் தோன்றியுள்ளவர்கள் சிலோனிலுள்ள எட்டுபிரதம பௌத்த குருக்களின் அதிகாரம் பெற்று 1898ம் வருடம் சென்னை இராயப்பேட்டையில் சாக்கைய புத்தசங்கம் என்னும் அரியபெயரளித்து இந்திய தேசத்திற் திராவிட பூர்வபௌத்தர்கள் எழுதிவைத்துள்ள நூற்களை அநுசரித்தும் சிலோன், பர்மா, தீபேத், சைனா, ஜப்பான், சையாம் முதலிய தேசத்து பௌத்தர்களின் நடவடிக்கைகளைப் பின்பற்றியும் புத்தரது போதனா சிலாரூபமும், சாதன சிலாரூபமும், பரிநிருவாண சிலாரூபமும் சங்கத்தில் ஸ்தாபித்து, சிலாரூபங்களை சுட்டிக்காட்டி, அவரது நன்மார்க்கங்களை விளக்கி, அவரைப்போல் நன்மார்க்கங்களில் நடந்து நித்தியானந்தமடையவேண்டும் என்றும், அதற்கு முதற்படியாம் கொலைசெய்யாமெய், பொய்சொல்லாமெய், களவுசெய்யாமெய், விபச்சாரஞ் செய்யாமெய், கள்ளருந்தாமெய் என்னும் சுத்ததேகிகளாக இல்லறம் நடாத்தற்கு பௌத்த குருக்களிடம் பஞ்சசீலம் பெற்று துற்கன்மங்கள் யாவையும் அகற்றி நற்கன்மங்களையே செய்து இந்நல்லவழிகாட்டிய பகவனாம் புத்தபிரான் மீது அன்பும் விசுவாசமும் வைப்பதுடன் நம்மெய் ஆண்டு ரட்சித்துவரும் பிரிட்டிஷ் அரசாட்சியார்மீதும் அன்பையும் விசுவாசத்தையும் நிலைபெறச்செய்து சுகவாழ்க்கையையடைய புத்ததன்ம நடைகளையும் உள் சீர்திருத்தங்களையுஞ் செய்துவர முயன்றதில் சென்னையில் சாதிபேதமென்னுங் கொடுஞ்செயல் இல்லாமல் வாழும் விவேகிகளிற் சிலர் பஞ்சசீலம்பெற்று பௌத்தர்களாயுள்ளதுடன் கோலார், பெங்களூர், திருப்பத்தூர், நாகப்பூர், செக்கன்றாபாத், இரங்கூன், நெட்டால் முதலிய தேசங்களிலும் சாக்கைய புத்த சங்கங்களை ஸ்தாபித்து நல்லொழுக்க சீர்திருத்தங்களில் நடைபெறச் செய்து வருவதுடன் இந்துக்களென்போர் சாதிபேதமென்னுங் கொடுஞ் செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள், பௌத்தர்களோ சாதிபேதமென்னுங் கொடுஞ் செயல் அற்று அன்பையே பீடமாகக்கொண்டு வாழ்கின்றவர்கள் அதுகொண்டு சென்னை சாக்கைய புத்தசங்கத்தார் கருணை தங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தாருக்கு விண்ணப்பம் அனுப்பி இந்துக்கள் செயல்களுக்கும் பௌத்தர்கள் செயல்களுக்கும் சம்மந்தமில்லாததால் இராஜாங்கத்தோர் வகுத்தெழுதும் குடிமதிப்புப் புத்தகத்தில் பௌத்தர்களை இந்துக்களுடன் சேர்க்காது பௌத்தர்களுக்கென்று வேறுகல மேற்படுத்தி பிரித்துவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டபடி வேறாகப்பிரித்தே காரியாதிகளை நடத்தி வருகின்றார்கள். அதன்பின்னர் சுடலையிலும் பௌத்தர்களுக்கு என்று பிரத்தியேக பூமி பிரித்துக்கொடுத்துவிட வேண்டும் என லோக்கல் போர்டாருக்கு விண்ணப்பித்த வண்ணம் பௌத்தர்களுக்கென்று சுடலை பூமியும் வேறாகப் பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.

இவ்வகையாக இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் யாதாமொரு சம்மந்தமுமில்லாமல் பிரித்துக்கொண்டதுடன் உள்சீர்திருத்தங்களாம் விவாகக் கிரியைகளையும் மரணக்கிரியைகளையும் வேறாகப்பிரித்துக் கொடுத்து விட்டார்கள்.

சாக்கைய புத்தசங்கத்தோருள் பௌத்ததன்ம முக்கியபோதம் யாதெனில் பௌத்தர்களுக்குக் கன்மம் உண்டென்றும் பிறவியுண்டென்றும் நற்கன்மங்களைச் செய்துவரில் பிறவிகள் தோறும் நற்பலனை அனுபவித்துவருவதுடன் நன்மெயே ஓர் உருவாகத் திரண்டகாலத்து நிருவாண சுகமடையலாம் என்றும்