470 / அயோத்திதாசர் சிந்தனைகள்
11. ஓதுவதொழியேல்
ஓதுவது - அறிவைபெருக்குங் கலை நூற்களை வாசிப்பதில், ஒழியேல் - நீங்கிவிடாதே என்பதாம்.
ஓதலும், ஓதிவைத்தலும், கற்றலுங் கற்பித்தலுமாயவை கலை நூற்களே ஆதலின், அவற்றை ஓதுவதினின்று ஒழியேலென வற்புறுத்திக் கூறியுள்ளாள்.
அறநெறிச்சாரம்
எப்பிறப் பாயினு மேமாப் பொருவதற்கு / மக்கட் பிறப்பிற் பிறிதில்லை - அப்பிறப்பில்
கற்றலுங்கற்றவை கேட்டலுங் கேட்டதன்கண் / நிற்றலுங் கூடப் பெறின்.
கலைநூற்களையே கற்கவேண்டும் என்னும் காரணம் யாதெனில் சிற்றறிவின் விருத்தியால் வித்தியா விருத்திகளோங்கி உலக வாழ்க்கை சிறப்படையவும், பேரறிவின் விருத்தியால் பூரணமுற்று சுகவிருத்தி யடைவதற்குமேயாம். நுண்ணிய அறிவை விருத்தி பெறச் செய்யுங் கலைநூற்கள் ஓதுவதை ஒழியேலென்பது கருத்தாம். (சில வரிகள் தெளிவில்லை)
இதனையனுசரித்தே விவேக மிகுத்தோர் ‘கண்டு படிப்பதே படிப்பு மற்ற படிப்பெல்லாந் தொண்டுபடிப் பென்றறி” என்றும் கூறியிருக்கின்றார்கள்.
12. ஒளவியம் பேசேல்
ஒளவியம் - ஒருவருக்கொருவர் பொறாமெயை உண்டு செய்யும் வார்த்தையை, பேசேல் - மறந்தும் பேசாதே என்பதாம்.
உலகத்தில் தோன்றியுள்ள மக்கள் வாழ்க்கைத் துணையாய் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழ்கவேண்டுமென்பது நீதிநூற் சம்மதமாதலின் அத்தகைய சேர்க்கை வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் பொறாமெயை, உண்டுசெய்யத்தக்க வார்த்தைகளைப் பேசி பொருந்தியுள்ள அன்பைக்கெடுத்து விரோதத்தைப் பெருக்கி வாழ்க்கைத் துணையைப் பிறித்துவிடுவதினால் ஒவ்வொருவருக்குமுள்ள உபகாரமும் கெட்டு சுகமற்றுப்போவதால் ஒருவருக்கொருவர் கேடுண்டுசெய்யும் ஒளவியமாம் பொறாமெ சொற்களைப் பேசேல் ஒருக்காலும் பேசாதே என்று வாழ்க்கைத்துணைநலம் கூறியுள்ளாள்.
இதை அநுசரித்தே கலைநூலோர் பொறாமெய் சொற்களால் அன்பர் உறவைப் பிரிப்போரும் களங்கமற்ற நெஞ்சினர்க்குக் களங்கம் உண்டு செய்வோரும், பிறர் தாரங்களின்மீது நாட்டமுள்ளோரும் அன்னியர் பொருளைக்கவ்விய நாய்படுங் கஷ்டம்போல் அல்லடைவார்களென்று கூறியிருக்கின்றார்கள். ஆதலின் பொறாமெசொற்களைப் புகலாதிருப்பதே புண்ணியபலனாகும்.
அறநெறித்தீபம்
அவ்வியமேகூறி மிகுவன்பிநிலைமாற்றுதலுஞ் செவ்வியவுள்ளத்தினிடந்தீங்கு நினைவூட்டுதலும்
பவ்வி பிறர்தாரமனையபற்றினமமோடுதலும்.
கவ்விய கணங்கனபடுங்காட்சி அதன் பயனாகும்.
13. அஃகஞ் சுருக்கேல்
அஃகம் - எக்காலமிருந்தபோதினும் குறைந்து அழியக்கூடிய தேகத்தை, சுருக்கேல் - நீயே வொடுக்கி சுகங்கெடாதே என்பதாம்.
தேகமானது பாலதானம், குமரதானம், அரசதானமென வளர்ந்து மூப்புதானம், மரணதான மெனத்தேய்ந்துத் குறைந்து சீர்க்கெடுவதியல் பாதலின். குமர, அரச, தானங்களையே தேய்த்துக் குறைப்பதானால் அவ்விருதானங்களையே மூப்புதானம் என்னும் பெயர் பெற்று மரணத்திற்கு ஆளாக்கிவிடுமென்பதாம்.
மக்களுக்குள்ள ஆயுள் வருடம் பதினாரைப் பாலதானமென்றும், வருடம் முப்பதை குமரதானமென்றும், வருடம் நாற்பத்தைந்தை அரச தானமென்றும், வருடம் எழுவதை மூப்புதானமென்றும், வருடம் நூற்றை மரணதானம் என்றும் வகுத்திருக்கின்றார்கள். இத்தகைய அழிவுக்குரிய ஆயுளாம் அஃதை குமரதானத்திலேயே குறைத்து சீர்கெடுப்பதானால்,