அயோத்தியா காண்ட ஆழ் கடல் 217
தம்பி குகனே! அயோத்தியில் உள்ள நம் சுற்றத் தாரைக் காக்க உன் தம்பி பரதன் அங்கே உள்ளான். நீ என்னுடன் வந்துவிடின், இங்கே உள்ள உன் சுற்றத்தாரைக் காக்க யார் உளர்? நீயே சொல்வாயாக. உனது சுற்றம் எனது சுற்றம் அன்றோ? அவர்கட்கு எந்தத் துன்பமும் வரக்கூடாதே. எனவே, என் சுற்றத்தாராகிய- இங்கு உள்ளவர்களை நீ இங்கே இருந்து காப்பாயாக! இது எனது அன்புக் கட்டளையாகும்:
அங்கு உளகிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி;
இங்குஉள கிளைகாவற்கு யார்உளர் இசையாய்நீ; உன் கிளை எனதுஅன்றோ? உறுதுயர் உறல் ஆமோ?
என்கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான்
(45)
இங்கே, இராமன் குகனை மிகவும் நெருக்கமான வனாகக் கொண்டாடியுள்ளான். பரதனை உம்பி’ (உன் தம்பி) என்றும், குகனுடைய சுற்றத்தை என் (இராமனின்) கிளை' என்றும் குகனிடம் இராமன் கூறியுள்ள அன்புரை நெஞ்சைத் தொடுகிறது.
குகனது மற உரை
பரதன் இராமனை அழைப்பகற்காகப் படைகளுடன் கங்கையை நெருங்குகிறான். இதைக் கண்ட குகன், இராமனைக் கொல்வதற்காகப் பரதன் வருகிறான் என்று தவறாக எண்ணித் தன் படைஞரை நோக்கிப் பரதனை விடமாட்டேன் என மற உரை பகர்கிறான். இந்த மற உரை பத்துப் பாடல்களில் அமைந்துள்ளது. இந்தப் பத்துப் பாடல்களையும் இ சையின்றி வாளா படித்தாலுமே அந்த மற உணர்வு பீரிட்டுக் கொண்டு தோன்றும், அவற்றுள் இரண்டினை மட்டும் காண்பாம்:
என் ஆருயிர் நாயகனாகிய இராமன் ஆளாதபடி வஞ்சனையால் அரசு பெற்ற பெரிய அரசர் வந்து