பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


ரிஷ்லு குடும்பத்துக்கு, மூன்றாம் ஹென்ரி எனும் பிரென்சு மன்னன், லூகான் நகர தேவாலயத்தை இனாம் தந்திருந் தான். பிரென்சு நாட்டிலே, மன்னர்கள் இப்படி, 'குரு பீடங்களை, 'தேவாலயங்களை', 'பூஜா மடங்களை' தமது இஷ்டம் போல் இனாம் தருவது வாடிக்கை.

இன்று முதல், ராமேஸ்வரம் தேவஸ்தானவட்ட அதிபராக ராமாச்சாரியார் நியமிக்கப்பட்டிருக்கிறார், அவரும் அவரது பின் சந்ததியாரும் ராமேஸ்வரம் தேவஸ்தான அதிபராக இருந்து, அதனால் கிடைக்கும் வருமானத்தை அடைந்து கொள்வர்--என்று ஒரு சர்க்கார் உத்தரவு இப்போது கிடையாது, இயலாது, ஜனநாயகம் அனுமதி அளிக்காது. புரட்சிக்கு முன்பு பிரான்சிலே இது சர்வசாதாரணமான முறை. மன்னர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு நிலங்களை, மாட மாளிதைகளை, பதவி பவிசுகளைத் தானமாகத் தருவது போலவே, குருபீடங்களையும் தேவாலயங்களையும் தருவர்! அதுமுதல் அந்த ஆலய வருமானத்தை அந்தக் குடும்பத்தார் அனுபவித்துக்கொள்வர்; அவர்களாகப்பார்த்து ஆலயகாரியங்களைக் கவனிக்க சம்பளத்துக்குப் பூஜாரியை நியமிப்பர். இந்த அலங்கோலமான முறை அமுலில் இருந்த காலம் அது. லூகான் நகர தேவாலயத்துக்கு, அந்த நகர மக்கள் செலுத்தும் காணிக்கை, அந்த நகர மக்கள் மதச் சடங்குகளுக்காகச் செலுத்தும் தட்சணை யாவும், ரிஷ்லு குடும்பத்தாருக்குச் சொந்தம். மதச் சடங்குகளை நடத்திவைக்கவும், ஆலயத்தில் தொழுகை பஜனை இவைகளை நடாத்தவும், ஒரு 'அர்ச்சகர்' வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவருக்குத் தந்த சம்பளம் போக. மீதமிருக்கும் தொகையைக் குடும்பம் எடுத்துக் கொண்டது.

லூகான் நகர தேவாலயம், அதிக வருமானம் தருவதல்ல--ஏழைகள் நிரம்பிய சிற்றூர். எனவே, சம்பளத்துக்கு அர்ச்சகரை வைப்பதைவிட, ரிஷ்லுவே, அந்த 'வேலை'யைப் பார்த்துக்கொண்டால் இலாபகரமாக இருக்கும் என்ற எண்ணம் பிறந்தது. சாமான்யக் குடும்பம்தானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/27&oldid=1549010" இலிருந்து மீள்விக்கப்பட்டது