பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


தர்ம பணத்தை, தரம் பார்த்துத் தருகிற வேலைதான்! உண்டிப் பெட்டிக்கு அதிகாரி, ஊராளும் வேலை அல்ல. ஆறாயிரம் பவுன் சம்பளம்!

இது அல்ல, ரிஷ்லு எதிர்பார்த்தது, எனினும் "இதுவா என் திறமைக்கு ஏற்றது" என்று வெறுத்துத் தள்ளிவிடவில்லை. அரண்மனையில் நடமாடலாம்--அனைவரையும் கவனிக்கலாம், ராணி ஆன் மனமறியலாம், மன்னனையும் சந்திக்கலாம், அரசியல் சம்பவங்கள் சுழன்றுகொண்டிருக்கும் இடத்தில் இருக்கலாம்--சமயம் கிடைக்கும் என்று எண்ணி, தர்மாதிகாரி வேலையை இசைந்து ஏற்றுக்கொண்டான்.

அரண்மனையிலோ, சூழ்ச்சியும் சதியும் நிழலுருவில் காணப்பட்டன. மேரியின் அச்சம் அதிகரித்தது-லைனிசுக்கு மன்னன் மீதிருந்த பிடி, பலப்பட்டது. கண்ணீர் பொழிந்தாள் மேரி; அந்தக் கயவனை விட்டு விலகடா கண்மணி! என்று கெஞ்சினாள்--நீ, கான்சினியை விரட்டு! என்று லூயி கூறவில்லை, ஆனால் மனதிலே அதுதான் எண்ணம். "அன்னையே! பாசம் மறையுமா! யார் என்னுடன் தோழமை கொண்டாலும், தாயின் மனம் நோக நடந்துகொள்வேனா" என்று பேசினானே தவிர லைனிசை விடவில்லை மன்னன். மேரியின் மனம் முறியலாயிற்று.

கிடைத்த சலுகை போதாது என்று கோபத்தால், காண்டிபிரபு, மீண்டும் தன் கோட்டையிலே புகுந்துகொண்டு பகை கக்கிக் கொண்டிருந்தான். அரசிளங்குமரி ஆன், கொஞ்சுமொழி பேச நானிருக்கும் போது, பறவை உலகிலே பொழுது போக்கும் மன்னன், மரக்கட்டையா, மதியற்றவனா, அல்லது மாயாவி லைனிஸ் போடும் மாயப் பொடியில் மயக்குற்று விட்டானா, என்று எண்ணி ஏங்கிக்கிடந்தாள். அரண்மனையில் வாழ்ந்தாள்--இளமையும் எழிலும் கொண்டவள்--பட்டுப் பட்டாடை, அணிமணி அலங்காரம், சேடிகள், கீதமிசைப்போர், கிண்கிணி அணிந்தோர், பானமளிப்போர், பரதம் அறிந்தோர் எனும் விதவிதமான பரி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/46&oldid=1549028" இலிருந்து மீள்விக்கப்பட்டது