பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73


ஏனோவா?- அவன்தான் ஆரத் தழுவிக்கொண்டானே! ஆன் அரசியின் உள்ளம் எதைத்தான் தள்ளும். கண்ணைத் திறந்தபடி இருந்தாலும் மூடினாலும், தனி அறையில் இருந்தாலும் சேடியருடன் இருந்தாலும், இசை கேட்டுப் பொழுது போக்கினாலும், வானத்தைக் கண்டு மகிழ முயற்சித்தாலும், அவனல்லவா வந்துவிடுகிறான்! ஆரத் தழுவுகிறான்!! ஆருயிரே! என்கிறான். இதுநாள் வரை கேட்டறியாத கீதம், உணர்ந்தறியாத இன்பம்! பொல்லாதவன், நல்ல உள்ளத்தைக் கெடுத்தேவிடுவான் போலிருக்கிறதே--எங்கே அவன் இப்போது--என்ன செய்கிறான்--மறுத்தேன் என்பதால் மருண்டோடி விட்டானா--அதே மலர்த்தோட்டத்திலே உலாவுகிறானா நான் வருவேன் என்றா--பேதை உள்ளம் என்னவெல்லாமோ எண்ணிற்று. அவன் வென்று விட்டான்--அவள் பணிந்துவிட்டாள். உள்ளம் பணிந்து விட்டது. உடனிருந்த தோழி அவள் உள்ளமறிந்து, பக்குவமாகப் பாகுமொழி பேசினாள். பிரபு அழைக்கப்பட்டான்--மஞ்சத்துக்கு! கொஞ்சு மொழி பேசினான்! அவள் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்கிறாள்--அவன் கீழே முழங்காற்படியிட்டபடி, மயக்கமொழி பேசுகிறான்! அவன் இருக்கும் இடத்தில் நிலையில் மன்னன் மட்டும் இருந்தால்! மன்னனா! அவனா என் மணாளன்? ரிஷ்லுவின் அடிமைக்கு ஒரு மங்கையின் உள்ளத்துக்கு இன்ப மூட்டும் பண்புமா இருக்கும். என்னைப் பட்டினி போட அல்லவா இந்த அரண்மனையில் சிறைவைத்தான்--இதோ வந்திருக்கிறான் வீரன், விடுதலை கிடைக்கும், விருந்து கிடைக்கும். ஆன் எண்ணாத எண்ணமில்லை.

விருந்து கிடைத்தது பிரபுவுக்கு! என்கிறார்கள்--இல்லை என்றும் கூறுகிறார்கள். பக்கிங்காம்-ஆன் காதலாட்டம் பற்றிய பேச்சு, அரண்மனையில் மட்டுமல்ல கடைவீதிகளிலே, பிரான்சிலே மட்டுமல்ல, உல்லாச உலகெங்கும் கிளம்பிற்று.

அந்தப் பக்கிங்காம், நூறு கப்பல்களுக்குத் தலைவனாக வருகிறான். லாரோகேல் கோட்டையினருக்குத் துணைபுரிய! பிரன்ச்சு மன்னன், அவனுடைய முயற்சியை முறியடிக்க

அ--5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/73&oldid=1549056" இலிருந்து மீள்விக்கப்பட்டது