கேகயன் மடந்தை ☐ 21
“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
என்று கூறிப் போனார். இந்த அடிப்படை உண்மைகளை மறவாமல் கம்பநாடன் காட்டும் கேகயன் மடந்தையைக் காண்போம்.
அருள் வழியும் கண்கள்
“நாற்கடல் படுமணி நளினம் பூத்தது ஒர்
பாற்கடல் படுதிரைப் பவள வல்லியே
போற்கடைக் கண் அளி-அருள் பொழியப்
மேற்கிடந் தாள்தனை விரைவின் எய்தினாள்.”
அழகிய பாற்கடல் நடுவில் பவளக்கொடி ஒன்று தாமரை பூத்து விளங்குவது போலக் கடைக்கண் வழியே அருள் பொழியக் கிடந்து உறங்கினாளாம் அப்பெண் கொடி போல்வாள். உறங்குகிற ஒருத்தியைக் கவிஞன் வருணிக்கிற நிலையைச் சற்றுக் கூர்ந்து கவனிக்கக்கத்தான் வேண்டும். முதல் இரண்டு அடிகள் உவமையாகலின், அவற்றை விட்டுவிட்டு, மூன்றாம் அடியின் முதற்பகுதியைச் சற்று உற்று நோக்குவோம். அவ்வழகிய முகத்திற்குப் பேரழகு செய்துகொண்டு விளங்குவன அவளுடைய கண்கள். விழித்திருக்கும் பொழுது அந்தக் கண்கள் எந்த உணர்ச்சியை மிகுதியாகக் கொண்டு விளங்கினவோ, அந்த உணர்ச்சியைத்தானே உறங்கும் பொழுதும் தாங்கி விளங்கும்? விழித்திருக்கும் பொழுது கண்களின் வழியே வெளிப்படும் உணர்ச்சி அக்கண்கள் மூடியிருக்கும் பொழுது குறைந்துதானே காணப்படும்? எனவே, குறைந்த உணர்ச்சிக்குக் கவிஞன் அளவு கூறுகிறான். கடைக்கண் அளி பொழிய என்ற சொற்களால் உறங்குகையிற்கூட அருள் வழிந்து ஓடினதாகக் கூறுகிறான். அவ்வாறாயின், அவள் விழித்திருக்கும் பொழுது எவ்வளவு அருள் உடையவளாய்த் திகழ்வாள் என்பதை நம் கற்பனைக்கு விட்டு விடுகிறான், கவிஞன். தன் கணவன், பிள்ளை