72 ☐ அரசியர் மூவர்
மூத்த மைந்தன் என்பது மரபு பற்றி வருவதேயாகும். இந்த அடிப்படை அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான் என்பதில் ஐயமே இல்லை.
அப்படியிருந்தும் மூத்த மைந்தனாகிய இராகவனை அழைத்துப் பதினான்கு பாடல்களில்
“சொல் மறா மகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்” (1380)
'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய பிள்ளைகளைப் பெற்றவர்கள்தாம் உயர்ந்தவர்கள்.' என்றெல்லாம் மிகப் பெரிதாக ஒரு முன்னுரை பேசிவிட்டு, 'இந்தப் பட்டத்தை ஏற்றுக்கொள்' என்று சொல்லுகிறான் தசரதன். இவ்வாறு சொல்வதற்குத் தேவை என்ன ஏற்பட்டது?
இராகவன் தன் வேண்டுகோளை ஒருவேளை மறுத்து விடுவானோ என்ற அச்சத்தினால்தான் தசரதன் இவ்வளவு பெரிய முன்னுரை பேசுகிறான். அப்படியும் அச்சம் நீங்காமல் இறுதியாக,
இந்தப் பதினான்கு பாடல்களில், 'மைந்தர்கள் என்பவர்கள் தந்தைமார்கள் என்ன ஆணையிடுகின்றார்களோ அதைச் செய்ய வேண்டிய கடப்பாடு உடையவர்கள்' என்று கூறுவதோடு “நான் இவ்வளவு காலம் வானப்பிரஸ்தம் செல்லாமல் இல்லறத்தில் தங்கிவிட்டது பெருந்தவறு. ஐந்து பொறி புலன்களை அடக்கியாள வேண்டிய தவ வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய காலம் இப்போது வந்துவிட்டது” என்றெல்லாம் விரிவாகப் பேசி, இறுதியாக,
“.... ..............அருந் துயர்ப் பெரும் பரம், அரசன்
வினையின் என்வயின் வைத்தனன்” எனக்கொள வேண்டா
புனையும் மா முடிபுனைந்து, இந்த நல் அறம் புரக்க
நினையல் வேண்டும்; யான் நின்வயின் பெறுவது ஈது (1381)