பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/136



சென்னை பச்சையப்பர் திடலில் நடைபெற்றது. நாவலர் ச. சோமசுந்தரபாரதியார் எம்.ஏ., பி.எல்., அவர்கள் விழாவுக்குத் தலைமைதாங்கினார். அறிஞர் அண்ணா தமிழக மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி பாவேந்தருக்கு ரூ.24,300/- (இருபத்து நான்காயிரத்து முந்நூறு ரூபாய்) அடங்கிய பொற்கிழியை வழங்கினார். தமிழ்மக்கள் வெள்ளம்போல் திரண்டிருந்தனர். சலகை ப. கண்ணனும், டி.என். இராமனும் நிதியளிப்புவிழாமலர் ஒன்று வெளியிட்டனர். தமிழ் நாட்டின் சிறந்த அறிஞர் பலர் அதில் பாவேந்தரைப்பற்றிக் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

நான் நாமக்கல்லில் நிதிக்குழுவைத் தொடங்கியதிலிருந்து, சென்னையில் பாவேந்தருக்கு நிதிகொடுத்த வரையில் எனக்கென்று ஏற்பட்ட எந்தச்செலவுக்கும் என் கைப்பொறுப்பில்தான் செலவு செய்தேன். நாமக்கல் திரு. கா. கருப்பணன் அவர்கள் நிதியளிக்கும் விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்து தொண்டாற்றினார்கள். பாவேந்தருக்கு நிதி கொடுக்கும் விஷயத்தில் பெரியாருக்கு உடன்பாடு இல்லை என்று பின்னர் பலரால் பேசப்பட்டது. பாவேந்தர் கூட இது விஷயத்தில் பெரியார் மீது ஐயங்கொண்டிருக்கலாம். பெரியார் துவக்க காலத்தில் தாமே ரூ. 150/- நன்கொடை வழங்கியதோடு, ஊக்கம் காட்டினார். ஆனால் ‘பாவேந்தர் நிதி’ இருபத்தையாயிரம் ரூபாயை எட்டிப்பிடிக்கும் என்று அவர் நினைக்கவில்லை. அந்த நாளில் கால் இலக்கம் என்பது மிகப் பெரிய தொகை. (நாமக்கல் கவிஞருக்கே அந்நாளில் ரூ. 1200/- தான் வழங்கினார்கள் வசதிமிக்க பேராயக் கட்சியார்).


‡ பாவேந்தருக்கு வழங்கிய பொற்கிழி ரூ. 25,000 என்று பொதுவாக எல்லாரும் குறிப்பிடுவதுண்டு, உண்மையாகக் கொடுத்த தொகை ரூ. 24,300/-தான்.