48 அருளாளர்
அறிவு அவர்களுடைய பக்திக்கும் உருக்கத்திற்கும் தடையாக அமையவில்லை என்பது மட்டுமன்று, அரணாகவும் அமைந்ததைத் திருவாசகம் போன்ற நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. மணிவாசகப் பெருமான் பெற்றிருந்த விஞ்ஞான அறிவு அவருடைய பக்திக்கு இடையூறாக அமையவில்லை. இதோ ஓர் உதாரணம், 'திருஅண்டப்பகுதி' என்பது திருவாசகத்தில் உள்ள மூன்றாவது அகவல். இப்பாடலுக்கு விளக்கம் தர வந்த இடைக்காலப் பெரியோர்கள் 'சிவனது தூல சூக்குமத்தை வியந்தது' என்று கூறினார்கள். இப்பாடலின் முதல் ஐந்து வரிகள் மட்டும் கீழே தரப்படுகின்றன.
- "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
- அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி
- ஒன்றனுக்கு ஒன்று நின்றஎழில் பகரின்
- நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
- இல்நுழை கதிரின் துன்அனுப் புரையச்
- சிறிய ஆகப் பெரியோன்..."
இதன் பொருள்: 'அண்டமாகிய பேருலகின் பகுதிகளின் உருண்டை வடிவமான பெருக்கம் அளத்தற்கரிய தன்மையுடையனவாய், வளமிக்க காட்சியுடையனவாய், ஒன்றையொன்று அடுத்து நிற்கும் நிலையினை அளவிட்டுக் கூறப்புகுந்தால் நூறுகோடியின் மேம்பட்டனவாகும். இத் துணைப் பெரிய அண்டம் முழுவதும், வீட்டினுள் இருளில் நுழையும் சூரியகிரணங்களில் காணப்பெறும் சிறிய அணுக்கள்போல உள்ளது என்று கூறும்படி அவ்வளவு பெரியோனாக விரிந்தும் பரந்தும் உள்ளான் இறைவன்.’
இப்பாடலில் காணப்பெறும் சில விஞ்ஞான உண்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவை தற்கால