பக்கம்:அருளாளர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 அருளாளர்கள்

போல் இந்த அகங்காரமும் அந்தப் பரம்பொருளில் கரைந்து விடுகிறது.

    இங்கனம் கரைந்து நிற்கும் நிலையைத்தான் ஆழ்வார் ‘பாலும் தேனும் நெய்யும் போலக் கரைந்தொழிந்தோம்' என்று பேசுகின்றார். யார் யார் கலந்தனர் என்பதற்கு விடை கூறுவார் போன்று 'தானும், யானும், எல்லாம், தன்னுள்ளே கலந்தொழிந்தோம்' என்றும் பேசுகிறார். இங்கு நின்று ஆராயத்தக்கது ஒன்றுண்டு. கலத்தலிலும் இருவகை உண்டு. 'நான்' என்ற பொருளை 'அவன்' என்ற பொருளில் கரைப்பது ஒரு முறை இதன் மறுதலையாக ‘அவன்’ என்ற பொருளையே 'நான்’ என்ற பொருளில் கரைப்பது மற்றோர் முறை.

இங்கு ‘அவன்’ என்பது முழுமுதற்பொருளையும் அவனால் படைக்கப்பெற்ற இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையுமே குறிக்கும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் 'நான்’ என்ற பொருளை இதில் கரைத்தவர்கள்தாம். இதன் எதிரே இராவணன், இரணியன் போன்றவர்களும் 'நான்' என்ற பொருளைக் கரைத்தவர்கள்தாம். இது என்ன புதுமை? ஆழ்வார்களோடு ஒருங்கு வைத்து இரணியன் முதலாயினோரை எண்ணலாமா என்று திடுக்கிடுபவர்கள் இருக்கலாம். ஒரு சிறு வேற்றுமையை அறிந்து கொண்டால் அடிப்படை விளங்கிவிடும்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் தம்மை (அவர்களுடைய 'நான்’ என்ற பொருளை) 'அவன்’ என்ற பரம்பொருளில் கரைத்துக் கொண்டவர்கள் 'தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்' தானேயாகி நிறைந்து . . . . தானே யான் என்பான் ஆகி', ‘என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே என்பனபோன்ற ஆழ்வார் வாக்குகள் இவர்கள் தம்மை அவனில் கரைத்துக் கொண்டவர்கள் என்பதை நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/85&oldid=1291985" இலிருந்து மீள்விக்கப்பட்டது