பக்கம்:அரை மனிதன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அரை மனிதன்



கடை வைக்கும் அளவுக்கு, முன்னால் குவிந்து கிடந்தன. 'ஆளுக்கு ஒரு வீடு' என்பது போல் ஒரு கார் இருந்தது. அதன் பழுதுகளைப் பற்றித்தான் பேசுவார்கள். பெட்ரோல் விலை அதிகமாகி விட்டது என்பது நாகரிக அடையாளப் பேச்சு. வேறு பேசுவதற்கு என்ன இருக்கிறது. ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் அவர்களை வலைப்போட்டு பின்னிப் பிணைத்தன.

மொத்தத்தில் பார்க்கும்பொழுது அங்கே வாழ்க்கையின் லட்சியமே சுகத்தைத் தேடுவது என்பது ஆகிவிட்டது. வாழ்க்கை சுகத்திற்கே என்ற தத்துவத்தை அங்கே கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டது. திறமையாக ஈட்டுகிறார்கள். தம்வரை தமக்கு வேண்டிய தேவைகளைச் சரிபடுத்திக் கொள்கிறார்கள். நிம்மதியாக இருக்கிறார்கள். மேல் மாடியிலே தென்றல் காற்று வீசுவது இயற்கைதானே. நிலவொளி அங்கே தானே தெளிவாகத் தெரியும். மின்னும் நட்சத்திரங்கள் அங்கிருந்து பார்ப்பதற்கே தனி அழகுதானே. அவனால் நிலா வெளிச்சத்தில் தங்கி இருக்க முடிவதில்லை. மின்னும் நட்சத்திரங்களையும் அவன் விரும்பினான். அதைத் தேடியும் அவன் கற்பனை சென்றது.

போகட்டும், அவர்கள் வாழ்க்கையின் விவரங்கள் எல்லாம் நமக்கு எங்கே தெரியப் போகிறது.

அவன் அங்கிருந்து மறுபடியும் கீழே வந்தால்தான் உருப்பட முடியும். மேல் மட்டத்தில் அவனைத் திருத்த நீதி நூல்கள் இல்லை. அவர்கள் நீதி எல்லாம் பிறரை எப்படிச் சுரண்டுவது, பிறரை எப்படி விலை பேசி வாங்குவது. நீதியையும் நேர்மையையும் விலைக்கு வாங்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள் நீதிகளைப் பற்றி எப்படிப் பேச முடியும்.

ஒரு கொடியில் இரண்டு மலர்கள். ஒன்று ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெற்றது; மற்றொன்று இதழ் சிதறிக் கீழே விழுந்து விட்டது. முன்னது மலர்ச்சி பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/88&oldid=1461985" இலிருந்து மீள்விக்கப்பட்டது