பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

7

ரல்லாதாராக இருந்தபோதிலும், இவர்களால் நாடு கெடுகிறது என்ற காரணத்தால், நாங்கள் கண்டிக்கத் தானே செய்கிறோம்! அவர்களுக்காகப் பரிந்து, நாங்கள் வாதாடவில்லையே. சமுதாயத்திலே இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாலும், பல ஆலயங்களின் தொடர்பைக் கொண்டு, நேர்மையற்ற செயல்களைச் செய்து வருவதாலும், மடங்களிலே மாசு உள்ளது என்ற காரணத்தாலும், நாங்கள் மடாதிபதிகளின் போக்கைக் கண்டிக்கிறோம்.

நெருக்கடிக்கிடையே உங்களை நிற்க வைத்துக் கொண்டு, வியாபார அலுவல் நேரத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. வியாபாரிகள் பலரிடையே நாங்கள் சொல்லும் கருத்து பரவவேண்டுமென்பதற்காகவே தான் இந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. வியாபாரிகளாகிய உங்களிடையே அதிகமாக நாங்கள் பழகாதவர்கள். 5 பலம் கற்பூரம் என்ன விலை? என்று ஒருவன் பேசிக் கொண்டிருக்கும்பொழுதுதான் நாங்கள் வேறு ஒரு இடத்தில் பேசிக் கொண்டிருப்போம். உங்கள் வியாபார நேரமும் எங்கள் பேச்சு நேரமும், ஒரே நேரத்தில் நடக்கின்ற காரணத்தால், உங்களிடையே நாங்கள் பழக இயலவில்லை.

நாங்கள் அதிகமாக உங்களிடையே பழகாத காரணத்தால், எங்களைப்பற்றிய சில தவறான கருத்துக்களை நீங்கள் கொண்டிருக்கக்கூடும். ஆகவே, நேரில் ஒருமுறை உங்களிடையே பேசுதல் நலம் என்று எண்ணியே இந்தக் கூட்டத்தில் பேச ஒப்புக்கொண்டேன். வியாபாரிகளாகிய உங்களை ஏமாற்றித் தேர்தலுக்கு ஓட்டு வாங்கிச் சட்டசபைக்குச் செல்லவேண்டுமென்று, நாங்கள் இங்கே பேசவரவில்லை. நல்லதொரு மசோதாவை, ஆதரித்துப் பேசவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.