பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அறப்போர்



பிறகு நமது கொள்கை நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்ற நிச்சயம் நமக்கு ஏற்பட்டுவிட்ட பிறகு, வெற்றி கிடைப்பதுபற்றியோ, தோல்வி நேர்வது பற்றியோ நமக்குக் கவலையேன்? நியாயத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும் போரில் ஒரு முறை தோல்வியுற்றாலும் மறுமுறை நிச்சயம் வெற்றியே கிடைக்கும். எனவே, மாஜி தளகர்த்தன் என்கிற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன், அறப்போர் விரைவில் தொடங்கட்டும். பெரியார் விருப்பப்பட்டால் என்னுடைய பெயரை முதல் வரிசையிலேயே சேர்த்துக்கொள்ளட்டும்!

எல்லோரும் வாருங்கள் சிறைச்சாலை!

சென்ற 10 ஆண்டுகளாக நாங்கள் அடி வயிறு வலிக்கப் பேசி வந்தது உண்மையானால், அதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி உண்மையானால், தமிழனுக்குத் தன்மானமிருப்பது உண்மையானால், தமிழ் மகனுக்குத் தன்மானம் காத்துக்கொள்ளும் வீரம் இருப்பது உண்மையானால், சென்ற போரின்போது தாலமுத்துவும் நடராஜலும் உயிர்த்தியாகம் செய்தது உண்மையானால், அச்சமயத்தில் ஆண்களும் பெண்களுமாக ஆயிரத்திற்கு மேற்பட்டுச் சிறைக்குச் சென்றது உண்மையானால், இத்தனை உண்மைகளும் பயனளிக்க வேண்டுமானால், திராவிடர் கழகம் இதுகாறும் ஆற்றிவந்த பணி வீண்போகாது இருக்கவேண்டுமானால், வாருங்கள் எல்லோரும் சிறைச்சாலைக்கு! அதை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாக்கிவிடுவோம்! மயிலினங்காள், வாருங்கள்! குயிலினங்காள், வாருங்கள் தமிழ்க் கானைகாள், வாருங்கள்! மூவேந்தர் வழி வந்த செம்மல்களே, வாருங்கள்! வாருங்கள் யாவரும் சிறைச்சாலை நோக்கி !!