பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னைத் தமிழை மீட்டு
வாகை சூடுவோம் வாரீர்!

நாம், தனிப்பட்ட ஒரு நபரையோ அல்லது பல நபர்களையோ அல்லது ஒரு கூட்டத்தினரையோ எதிர்த்துப்போர் துவக்கவில்லை. நம் நாட்டில் நுழைய விடப்படும் ஆரிய கலாசாரத்தை எதிர்த்துத்தான் போர் தொடங்குகிறோம் என்பதை நம்மில் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும். பிரதம மந்திரி ரெட்டியார் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நமக்கு மறியல் செய்யும் உரிமையை அளித்திருந்தார். அதுவரை அவருக்கு நம் நன்றி! அதோடு பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்காகவும் நமது நன்றி உரித்தாகுக! அவர் அறிக்கைப்படி பொதுமக்கள் நடந்து கொள்வதுதான் மிகவும் சிலாக்கியமானது,

திராவிடர் பண்பு

அடிக்கு அடி, உதைக்கு உதை கொடுப்பதுதான் திராவிடர்களின் பண்பு. அப்பண்பை நாம் கொஞ்ச காலத்திற்கு மறந்திருக்க வேண்டியது மிக அவசியம். அப்பண்பை மறந்திருந்தால்தான் நமது போர் வெற்றியடையும்.

நமது போரில் சிறிதேனும் பலாத்கார உணர்ச்சி காட்டப்பட்டால், நமது போர் நிச்சயம் படுதோல்வி அடைந்துபோகும். பலாத்கார உணர்ச்சியை நாம் அடியோடு மறந்திருக்கவேண்டும்.