பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

55



நமக்கு பலாத்கார உணர்ச்சி தேவையில்லை. நமக்கு மட்டுமல்ல; நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தப் போராட்டத்திற்கும் பலாத்காரம் தேவையில்லை. எனவே, நியாயத்தின் மீது கட்டுப்பட்டுள்ள நமது ஹிந்தி எதிர்ப்புப் போருக்கும் சிறிதும் பலாத்கார உணர்ச்சி தேவையில்லை.

மேலும் நமது போராட்டம் சுயநலம் அற்றது. இப் போராட்டத்தை நடத்துவதால், நாம் மந்திரிசபையைக் கைப்பற்ற நினைக்கவில்லை. இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு நாம் சட்டசபை அங்கத்தினர் பதவியை அளிப்பதாக வாக்குறுதி கொடுக்கவில்லை. ஒரு பஞ்சாயத் போர்டு அங்கத்தினர் பதவியைப் பெறுவதற்குக்கூட நாம் உதவி செய்வதாக வாக்களிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ்காரர் நடத்திய போராட்டத்தில் அப்படிக்கில்லை. அவர்கள் தியாகத்திற்குப் பலன் அளிப்பதாக வாக்களித்தார்கள். அதே போல் சிலரை மந்திரியாக்கினார்கள். சிலரைச் சட்டசபை அங்கத்தினராக்கினார்கள். ஒருவர் கவர்னர்--ஜெனரலாகக்கூட ஆகிவிட்டார்.

சுயநலம் கலவாத் தியாகம்

எனவே, காங்கிரஸ்காரர் தியாகம், சுயநலங் கருதிய தியாகம். நமது தியாகமோ சுயநலம் கலவாதது; வீரம் கலந்தது! எனவே, இந்த அறப்போரில் கலந்துகொள்ளும்படி நாம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

'தன்மானத்தில் விருப்பமுள்ள தோழர்களே, வாருங்கள்! வாலிபர்களே,வாருங்கள்! தாய்மார்களே, வாருங்கள்!' என்றுதான் அழைக்கிறோம்.