பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

59


கட்டுப்பாடு, ஒழுங்கு அவசியம்!

எனவே பலாத்காரம் இன்றி, கட்டுப்பாட்டோடும், அமைதியோடும், சிறிதும் பொச்சரிப்பு இன்றியும் நாம் நடந்துகொள்ளவேண்டும்.

ரெட்டியார் அவர்கள் தம் அறிக்கையில் கடைசியாகக் குறிப்பிட்டுள்ளார், 'அத்துமீறி நடப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்' என்று. இதற்கு ஒரு அறிக்கை தேவையில்லை. பார்க்கில் தொங்கிக்கொண்டிருக்கும் பலகை கூட இதை நமக்குத் தெரிவிக்கும். சர்க்கார் என்று ஒன்று இருப்பதே சட்டம் செய்வதற்குத்தான் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்! "சட்டம் செய்ய ஒரு சர்க்கார் இருப்பதும், அச்சட்டத்தைக் காப்பாற்றப் போலீஸ் இருப்பதும், போலீஸால் காப்பாற்ற முடியவில்லை என்றால் அதற்கு ராணுவம் துணையாக இருப்பதும், போலீஸையும் ராணுவத்தையும் காப்பாற்ற சர்க்கார் பொக்கிஷம் இருப்பதும், அப்பொக்கிஷத்தை நிரப்ப அதற்கான பணந்திரட்ட அதிகாரிகள் இருப்பதும், அவர்களுக்கு அடங்கித் தம் உழைப்பின் பலனை அளித்த உழைப்பாளிகள் இருப்பதும், அவ்வுழைப்புக்கென அவர்களுக்கு உயர் தோள்கள் இருப்பதும், சர்க்காரைக் காப்பாற்றத்தான் என்ற 'அரசியல் அரிச்சுவடி' நமக்குத் தெரியும்! இதை நமக்கு அமைச்சர் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை! நாம் அத்து மீறி நடக்கமாட்டோம். எனவே, ஆளவந்துள்ள நீங்களும் உங்கள் அத்தைத் தாண்டி வராதீர்கள். உங்கள் அத்து எது என்பதை மட்டும் எங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுங்கள். மறியல் சாத்வீகமாகத்தான் நடக்கும்.