பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்பத் திராவிடத்தில்
அந்நிய ஆதிக்கம் வளரவிடோம்!

அதற்காகத்தான் 'நாட்டு மொழியைக் காப்பாற்ற வீட்டுக்கோர் பிள்ளை தேவை' என்று கூவியழைக்கிறேன். வீட்டுக்கொரு பிள்ளை வேண்டும். அப் பிள்ளையைத் திருப்பியனுப்பக்கூடும் என்று நல்லுறுதி கூறக் கூட எங்களால் இயலாது. வெற்றிகிடைக்கும்வரை உயிரோடு இருந்தால் திரும்புவார்கள்; இன்றேல், தாலமுத்து, நடராஜனைப்போல் தம் கருத்தை மட்டும் விட்டுச் செல்வார்கள். இப்படிப்பட்ட தோழர்கள்தான் நமது போராட்டத்திற்குத் தேவை.

இந்திய உபகண்டத்திலேயே பெரியார் இராமசாமி ஒருவர்தான் வயது மூத்த அரசியல்வாதி. அரசியலில் ஒரு காலத்தில் அவருடைய சகாக்களாயிருந்த தோழர் காந்தியார் மறைந்தார்; அதற்கு முன்பே தாகூர் மறைந்தார்; இன்றுள்ள அரவிந்தகோஷ் இந்தப் பாபிகள் கண்களில் விழிப்பானேன் என்று ஆஸ்ரமத்திலேயே அஞ்ஞான வாசம் செய்கிறார்! எனவே, எஞ்சியுள்ள 70 வயது மூத்த ஒரே ஒரு பெரியார், ஹிந்தி எதிர்ப்பின் தலைவர் என்பதற்காகக் கைது செய்யப்படுவதைத் தமிழர்கள் காணட்டும்; ஓமாந்தூரார் ஆட்சியையும் காணட்டும்.

"இந்தத் தள்ளாத வயதில் அரசியல் லாபத்திற்காகவா சிறை செல்கிறார் பெரியார்? அல்லது அவரைச் சார்ந்த எங்களுக்குப் பதவி வாங்கிக்கொடுக்கவா அவர் சிறை செல்கிறார்?" என்பவற்றைப் பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!