56
வீசப் பெற்று உடல் கரிதாய்த் தோன்றும் புறத்தோற்றத்தினை எடுத்துக் காட்டி, இதுபோலவே பாம்பின் வாயினுள்ளே யமைந்த நஞ்சும் அப் பாம்பு இறைவனது நஞ்சு பொருந்திய கண்டத்தினை நக்கினமையால் ஏற்பட்டதோ என அம்மையார் புனைந்துரைத்த திறம் மிகவும் சுவை தருவதாகும்.
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தூங்குதலால் — ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.
(67)
இ-ள்: பொன்னிறம் வாய்ந்த திருவுருவமும் மிக்குத் தோன்றும் பேரொளியும் உடைய கண்ணுதற் கடவுளது அருட் கோலத்தின் திருத்தகவிற்றாகிய தோற்றம், பாம்பும் சந்திரனும் இளமை பொருந்திய மானும் பாய்ந்து கொல்லும் புலியும் ஆகிய இவை பொருந்தப் பெற்று விளங்குதலாலும் கங்கையாற்றின் நீர் அருவி போன்று தாழ்ந்தொலித்தலாலும் அடி பரந்து உயர்ந்த மலையொன்றிருக்குமானால் அதன் தோற்றத்தை யொக்கும் எ-று.
கண்ணுதலான் கோலத்திரு, பாம்பு, மதி, மான், புலி என்னும் இவை பயிலப் பெறுதலாலும், அருவி நீர் ஒலித்தலாலும் சிலம்பு (போல்வது) ஆம் என முடிக்க. சிலம்பு — மலை, ‘பாம்பும் மதியும் மட மானும் பாய் புலியும் தாம் பயின்று தாழருவி தூங்குதலால்’ என்ற தொடர், இறைவன் திருமேனிக்கும் மலைக்கும் பொருந்தச் சிலேடையாய் நின்றது. இஃது ஏதுப் பொருட்டாய் வந்த சிலேடையுவமை. அடியின்மேய சிலம்பு— அடி பரந்து உயர்ந்த மலை. இனி, மூன்றாம் அடியின்