அலைகள் O 215
ஆனால் அம்மாவைப் பார்த்தாலும் தான் பாவமாயிருக்கிறது. கல்லுக்கணக்கில் கழுத்து கனக்க காசுமாலையும், வடம் வடமாய்ச் சங்கிலியும், கையில் பூட்டிய பொன்விலங்காய் கெட்டிக்காப்பும் போட்டுக் கொண்டு வளைய வந்ததெல்லாம் எனக்கே ஞாபகமிருக்கிறது,
"மரத்தொட்டிக்குப் பட்டை போட்டாற்போல், ஒட்டியானம் உனக்குக் கணிசண்டீ!’ என்று அப்பா அம்மாவின் (அந்தநாள்) உடல் 'கொஷ்குமுஷ்கு'வைக் கேலிபண்ணுகையில், அம்மாவுக்குக் கோபத்தில் கண் துளும்புகையிலேயே, சிரிப்பில் அன்னங்குழியும் ( "ஐய, என் அதிர்ஷ்டமே! ")
ஆனால் ஒருநாள் இருவருக்குமிடையில் 'லடா'யில் அம்மா எது எதையோ கழற்றிக் கொடுத்துவிட்டு, சமையலறையில் நுழைந்து அடுப்பெதிரில் தலைமேல் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததும், அடுப்பு சரியாய் எரியாமல் புகைந்து கண்ணைக் கரித்ததால் ஆத்திரத்துடன் கிண்ணி நெய்யை, கூடத்தில் அப்பா காது கேட்க நெருப்பில் 'ஸ்வாஹா!’ என்று சொல்லிக் கொண்டு ஆஹுதி விட்டதும் ஞாபகம் வருகிறது. ஜவாலை ‘குபீ'ரென்று கிளம்பியதும் அம்மா, "மாதவா, இது என் வயிறுடா என்றாள்!.
எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
அம்மாவின் கழுத்தெலும்புக்குழியில் மஞ்சள் கயிறு மாத்திரம்தான் தங்கியிருக்கிறது.
அப்பா அம்மா இரண்டு பேரைப் பார்த்தாலும் பாவமாயிருக்கிறது.
ஆனால் எனக்கு யாரைப் பார்த்தாலுமே பாவமாயிருக்கிறது.
நான் இன்று முதல் யாரிடமும் ஏமாறப் போவதில்லை.
***
குருட்டு யோசனையில், வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறேன்.