அலைகள் O 227
போதும். நானே ஆயிரம் தந்திகளாய் அலறிவிடுவேன். ஜன்னலுக்கு வெளியே குளவி ஒன்று. அதன் ரீங்காரம் குடையடிக்கின்றது ஆக்கர்போல் அது என்னைத் துருவி, உள் வீங்குகையில், அதில் முங்கி முங்கி என் மூச்சுத் திணறுகிறது. தலையை உதறிக்கொண்டு விழித்துக் கொள்கிறேன்.
என்னை அழுத்திய வேகம் சட்டென விட்டுவிடுகிறது. நான் காத்திருந்த சமயம், என் கண்னெதிரிலேயே என்னை ஏமாற்றி என்னைக் கடந்துவிட்டது. சமயத்தின் வடிவத்தில் வந்து, தன்னைக் காண்பிக்காமலேயே என்னைத் தொட்டு விட்டு, சமயத்தினூடே சென்றுவிட்ட அவள் யார்?
நான் தேடுவது யார்? ஏன் தேடுகிறேன்? ஏன் ஏமாறுகிறேன்?
ஒன்று அறிகிறேன்.
தேடத் தேட ஏமாறல்.
ஏமாற ஏமாறத் தேடல்.
பிறக்கும் கேள்வியிலேயே, அதற்குப் பதிவின் கரு தொக்கியிருப்பது போல் தேடலிலேயே, தேடும் பொருளின் செந்தூரம் கலந்திருக்கிறது.
ஏமாந்தவனே கொடுத்து வைத்தவன். அவனைவிடத் தேடலின் போதையைத் தெரிந்தவன் யார்?
***
ஒருநாள்.
லைப்ரரியில் ஏதோ ஒரு புத்தகத்தையெடுத்துப் புரட்டுகிறேன். உள்ளிருந்து ஒரு துண்டுக் காகிதம் பறந்து விழுகிறது. எடுத்து அதில் எழுதியிருக்கும் மூன்று வரிகளைப் படிக்கிறேன். -
“இந்த தடவை ஏமாற்ற மாட்டேன்.
இன்று மாலை 4.30 மணிக்குக் கட்டாயம்,
வேப்பமர “பஸ் ஸ்டாப்"பில் காத்திருங்கள்."