56 O லா. ச. ராமாமிருதம்
எனக்குப் போதை பூரா தெளியவில்லை. வாய் ஏதோ முணுமுணுத்தது. அவள் கண்களில் கனல் நீராக துளித்தது.
"குண்டலி செத்துப்போயிட்டாள்". அவள் குரல் கடுத்தது.
"ஹா!" அப்புறம்தான் நினைவு வந்தது. குடிகாரன் கபடு என்னுள் புகுந்துகொண்டது. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.
“குண்டவி செத்துப்போக மாட்டாள்!” என் வார்த்தைகள் கொழகொழத்தன.
“இல்லை; அவள் ஒழிஞ்சு, அவள் மேல் புல் முளைச்சாச்சு!"
"உனக்கெப்படித் தெரியும்?"
எனக்குத் தெ ரி யு ம். நான் பொம்மனாட்டியில்லையா?”
"உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். குண்டலியால் இறக்க முடியாது; வெட்டில் விட்டுப்போன கோடரிபோல் இங்கு தங்கியிருக்கிறாள்-" என் மாரைத் தட்டிக்கொண்டேன். மார் விண் விண் எனத் தெறித்தது. “மேலே மரமும் வேர்களும் மூடி வளர்ந்துவிட்டாலும் உள்ளே பிளவில் புதைந்தபடி கோடரி அப்படியேதானிருக்கிறது.”
“இந்த நிலையிலிருந்து விமோசனம் இல்லையா?”
"எந்த நிலை? வாழ்க்கை முழுவதுமே ஒரு நிலைக் கூடு. தேன் கூடு போல். வாழ்க்கை நிலையற்றதாயினும் ஒரு ஒரு நிலையும் ஒரு ஒரு தனித்தனி வாழ்க்கை. ஆகையால் நிலைகளிலிருந்து விடுதலையுமில்லை; அழிவுமில்லை.”
“நிஜமாவா? அப்போ நமக்கு விமோசனமில்லையா?”
"எதிலிருந்து? என்ன வேணும் உனக்கு? பொறுமை இழந்தேன். என் போதை கலைந்துகொண்டிருந்தது.