முள் O 73
துளித்து நின்றது. சட்டென விரலை வாயுள் வைத்துச் சப்பினேன்; பிறகு அந்த இடத்தில் நகத்தால் சுரண்டிப் பார்த்தேன்.
"ஏதாவது இடறுகிறதா?”
என்மேல் வைத்த கண்கள் மாறாமல் என்னையே சிந்தித்துக் கொண்டிருந்தன. முகத்தில் புன்னகை மாற வில்லை.
“முள் எல்லாம் ஒரு சமயம்போல இருக்காது; முள்ளுக்கு விஷமுண்டு..." என்று சொல்லிக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தேன்.
“அவசரத்துக்கு அருக்கஞ்சட்டி கைக்கொள்ளாது. என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டுக் கொண்டே அவர் சட்டைப் பையில் நீட்டிக் கொண்டிருந்த கைக்குட்டையை இழுத்து, ஒரு ஒரத்தை நாடாவாய்க் கிழித்து விரலில் சுற்றினேன்.
அவர் புருவங்கள் வினாவில் எழுந்தன. என்ன அடர்த்தி, என்ன முரடு, அணில் முதுகில் ராமர்கோடு போல்!
“நான் ஏதோ நல்ல எண்ணத்தில்தான் பறித்துப் பக்கத்தில் வைத்தேன்; நான் எழுந்த இடத்தில் இருக்கட்டும். நீங்கள் கண் திறந்ததும் உங்களுக்கு நல் முழிப்பு ஏற்படனும் என்று. ஆனால் பொழுதுவிடிந்ததும் விடியாததுமாய் முள்ளைத் தைத்துக் கொண்டு நிற்கிறீர்கள்!"
சொல்லும்போதே எனக்கு அழுகை வந்துவிட்டது.
என் கன்னத்தில் சரளமாய்ப் புரளும் கண்ணீரைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். இன்னும் சிந்தித்துக் கொண்டு தானிருந்தார். முகத்தில் புன்னகை மாறவில்லை. அவர் அம்மாதிரியிருந்தது எனக்கு எரிச்சலாய் வந்தது. கோபத்தோடு கன்னத்துக் கண்ணீரை விரலால் வழித்து உதறினேன். மூக்கை உறிஞ்சிக் கொண்டேன்.