126 ❖ லா. ச. ராமாமிர்தம்
“அகிலா, அவள் நம் இஷ்டத்திலில்லை. நாம்தான் அவள் இஷ்டத்திலிருக்கிறோம்.”
“இதென்ன பாஷை, என்ன புதிர்?”
“சாயந்தரம் வரைக்கும்தான்”-கெஞ்சினார்.
ஒன்றும் புரியவில்லை. பொட்டைத் தேய்த்துக் கொண்டு அகிலா உள்ளே சென்றாள். கூடவே பிடரி குறுகுறுத்தது. பயம்?
அவள் டப்பாக்களைத் திறந்து, உள் பார்த்து மூடிக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா தேடறே?”
“பசிக்கறதம்மா!”
அகிலாவின் பார்வை அடுப்பு மேடைமேல் சென்று திக்கிட்டது.
“பெண்ணே, உன்பேர் என்ன?”
“கமலா.”
“சரி, வா கமலா, இந்த மணைமேல் உட்கார், வெள்ளிக்கிழமை, ஒரு கை எண்ணெய் தலையில் வைக்கறேன். சற்றுப் பொறு, சமையலாயிடும்.”
“ஆமாம், எத்தனை நாள் வேணுமானாலும் பட்டினி கிடப்பேன். பசிக்கணும்னு நெனச்சேன்னா தாங்கவே முடியாது. என் பசி ஒருத்தி பசி மட்டுமல்ல. எத்தனையோ பசிகள்.”
என்ன உளறுகிறாள்? வெண்கலப் பானை காலி. இன்னுமா பசி? அதென்ன பசி? ஆச்சரியம். கூடவே பயம்.
கூந்தலின் அடர்த்திக்கும் நீளத்துக்கும் எண்ணெய்